இந்தி திணிப்பு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஊருக்குத்தான் உபதேசம் செய்கிறார் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
இந்தி திணிப்புக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். குறிப்பாக இந்திதான் இணைப்பு மொழி என்று உள் துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் பேசிய அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பைத் தமிழக அரசு இந்தியிலும் வெளியிட்டுள்ளது.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், “தமிழ் மொழியை வளர்ப்பது என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும்,குறிப்பாகப் பிறமொழி பேசுபவர்களைத் தமிழ் கற்றுக் கொள்ள வழிவகை செய்வது, பிற மாநிலங்களில் உள்ள மக்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது, தமிழுக்கான இருக்கைகளைத் தோற்றுவிப்பது, உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளைத் தோற்றுவிப்பது போன்றவை ஆகும். ஆனால், தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய முதலமைச்சர் அதைச் செய்யாமல், தன்னை வளர்த்துக் கொள்ளும் பணியில், தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பணியில், இந்தி மொழியை வளர்த்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னை தேசியத் தலைவராகப் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வட மாநிலங்களில் அவர் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் திமுகவால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முதல் கட்டமாகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு செய்தி – மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டு தொல்லியல் துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.
ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்குப் போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது திமுக, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்குப் பேரறிஞர் அண்ணா கூறிய இருமொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்குப் பதில் ஏன் மும்மொழிக் கொள்கையில் ஒன்றான இந்தியை திமுக தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருவேளை ஊருக்குத் தான் உபதேசம் போலும்!
திமுகவின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, “பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி, இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே” என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் என் நினைவிற்கு வருகின்றன. திமுகவின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த ஏமாற்றம், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி, அதிமுக ஆட்சியில் அமர வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார்.
**-பிரியா**