சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 50 சதவிகித ஊழியர்களுடன் மட்டுமே அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டும் என தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிகமாக பாதிப்பு ஏற்படுத்தி வருவதால், பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீதிமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது. அதன்படி, நேரடியாக வழக்கை விசாரிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு, காணொலி காட்சி மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், வழக்கறிஞர் அறைகள், சங்கங்கள், நூலகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதிகள் மட்டும் நீதிமன்றங்களுக்கு வந்து நேரடியாக வழக்கை விசாரித்து வருகின்றனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ப.தனபால் வெளியிட்டுள்ள உத்தரவில், “மே 1 ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் 50 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற ஊழியர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாள்கள் பணி என சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் . மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்.
நீதிமன்றம் பிறப்பிக்கும் வழிகாட்டுதல் மட்டுமல்லாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
.�,