தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்தும் நோக்கில் ஊரடங்கை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு நேற்று (ஆகஸ்ட் 30) உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், மத பண்டிகை கொண்டாட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது மக்கள் அதிக அளவில் கூடி அதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால், தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
**மதச்சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்தத் தடை**.
பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கு தடை. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி இல்லை. அதுபோன்று சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு அனுமதி இல்லை.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில்’ சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை, கடற்கரையில் குறிப்பாக சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் இச்செயல்பாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அனுமதி தனிநபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுவதுமாக தடைசெய்யப்படுகிறது.
சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் இதர இடங்களில் கிறிஸ்துவ சமயத்தாரால் கொண்டாடப்படவுள்ள மரியன்னையின் பிறந்தநாள் திருவிழாவின்போதும், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,”