‘நீட் தேர்வில் விலக்கு அளிக்காதது தொடர்பாக தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்’ என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நேற்று (ஜனவரி 5) தமிழகச் சட்டமன்றம் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், டி.ஆர்.பாலு இப்படிப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், நீட் தேர்வு மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையிலேயே உள்ளது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எனினும் ஆளுநர் தரப்பில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஏழு கட்சிகளின் பிரதிநிதிகள் உள்துறை அமைச்சரைச் சந்திக்கத் திட்டமிருந்தனர். கடந்த இரண்டு முறை நேரில் சென்ற போது கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறை நேரில் சென்றும் கடைசி நேரத்தில் சந்திக்க முடியாது என்று அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நீட் தேர்வு விலக்கு அளிப்பது தொடர்பான மசோதா நிலுவையில் இருப்பதற்குத் தமிழக ஆளுநர்தான் பொறுப்பு. இதற்காக ஆளுநர் பதவி விலக வேண்டும். அரசியல் காரணங்களுக்காகத் தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்களைச் சந்திக்க மறுக்கிறார் என்று நினைக்கிறேன். ஆளுநர் தமிழகத்துக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறார். அடுத்ததாக இந்தக் குழு உறுப்பினர்கள் பிரதமரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.
மேலும், “ஆளுநர் நாங்கள் எழுதிக்கொடுத்த உரையைப் பேசியுள்ளார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், நீட் தேர்வு விவகாரத்தில் அவர் போதிய அக்கறை காட்டவில்லை. காலம் தாழ்த்துவது அவரின் பிரதான நோக்கமாக இருக்கிறது” என்று தெரிவித்தார். பின்னர், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று தமிழகச் சட்டமன்றம் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், டி.ஆர்.பாலு இப்படிப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
**-ராஜ்**
.�,