ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி: சாதிச் சர்ச்சையில் அடுத்து பிடிஆர்

politics

அதிமுகவின் அமைச்சர்கள் பலர் பேட்டி கொடுக்கும்போது தெரிவிக்கும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சைகளையும் சலசலப்புகளையும் உண்டு பண்ணுவது ஒரு வழக்கமாகவே இருந்தது. ஆனால் இப்போது இந்த சர்ச்சைப் பேட்டிகளுக்கும் கருத்துகளுக்கும் திமுகவினர் பொறுப்பேற்றுக் கொண்டு விட்டார்களோ என்று எண்ணும் அளவுக்கு திமுகவினரின் பேட்டிகள் அமைந்து வருகின்றன. இந்த வகையில் லேட்டஸ்டாக திமுகவின் ஐடி விங் மாநில செயலாளரும் மதுரை சட்டமன்ற உறுப்பினருமான பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பேச்சு சர்ச்சையாகி வருகிறது.

அண்மையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுக இளைஞரணியினரின் கூட்டத்தில் பேசும்போது பிராமணர்கள், பட்டியலினத்தவர், பத்திரிகையாளர்கள் என்று சமூகத்தின் சகல தரப்பையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். பட்டியலினத்தோர் நீதிபதிகளானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்றார்,

அடுத்ததாக திமுகவின் மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன், தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்துவிட்டு வெளியே வந்து, ‘எங்களை மூன்றாந்தரமாக நடத்துகிறார். நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா?’ என்று கேட்டு அடுத்த சர்ச்சையைப் பற்ற வைத்தார். இதில் தயாநிதிமாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைகளுக்கிடையில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் மே 20 ஆம் தேதி காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில், ‘மாநில அரசுக்குள் அத்துமீறித் தலையிடுகிறதா மத்திய அரசு?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேசிய பழனிவேல் தியாகராஜன், “இன்றைய பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக பல ஆண்டுகள் இருந்தபோது கூட்டாட்சியின் சாம்பியனாக மத்திய அரசை நோக்கி பல கேள்விகளைக் கேட்டார். மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு குறுக்கீடு செய்வதாக சுமார் பதினைந்து அம்சங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவரே பிரதமரான நிலையில், நாங்களே எல்லாவற்றையும் பார்ப்போம் என்று சொல்கிறார். இது எனக்குப் புரியவில்லை.

அம்பட்டன் கடையை கூட முடிவெட்டும் கடையைக் கூட டெல்லி சொல்வதன்பேரில்தான் திறக்க வேண்டும் என்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

இதுதான் சர்ச்சைக்குரியதாகிவிட்டது. அம்பட்டன் என்பது முடி திருத்துபவர்களை கிராமங்களில் ஒரு காலத்தில் அழைத்த பெயர். இது மரியாதைக் குறைவாக இருப்பதாகக் கருதி இந்த சொல்லை பொதுவெளியில் யாரும் இப்போது பயன்படுத்துவதில்லை. மருத்துவர், நாவிதர், பார்பர், முடி திருத்துபவர் என்று அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் ராஜன், சலூன்களை, ‘அம்பட்டன் கடை’ என்று அழைத்திருப்பது அந்த சமுதாயத்தினரை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக சமூக தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். பிடிஆர் பேசிய அந்த காட்சியையும், முடி திருத்தும் சமுதாயத்தை அவமானப்படுத்திவிட்ட திமுக எம்.எல்.ஏ. என்றும் சமூக தளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

சமூகம் பண்பட, பண்பட சில வார்த்தைகளின் பயன்பாடு குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக நாகரிக சொல் பயன்பாட்டை புழக்கத்தில் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் இதுபோன்ற பழைய வார்த்தைப் பிரயோகங்கள், பழைய சிந்தனையிலேயே இருப்பதாக வெளிக்காட்டி விடுகிறது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *