ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல் துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல் துறையினருக்கு எதிரான புகார்களைக் கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல் துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, காவல் துறையினருக்கு எதிராக புகார் அளிக்க மாநில அளவில் உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமையிலான புகார் ஆணையமும், மாவட்ட அளவில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான புகார் ஆணையமும் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காவல் துறை சீர்த்திருத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அமைக்கப்பட்ட ஆணையத்தில் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாறாக, மாநில அளவிலான புகார் ஆணையத்துக்கு உள்துறை செயலாளர் தலைமையில் டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். மாவட்ட அளவிலான புகார் ஆணையத்துக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்ட ‘காவல் துறை சீர்த்திருத்த அவசர சட்ட’ விதிகளை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக்கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கடந்த வாரம் காவல் துறை மற்றும் பொதுமக்களிடையே சுமுக உறவு நிலவும் வகையில் புதிய காவல் ஆணையத்தை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அமைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த வழக்குகள் மீண்டும் நேற்று (ஜனவரி 24) பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, உள்துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்பதற்கான விதிகளை வகுத்துள்ள நிலையில், தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க விதிகளில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவுபடி காவல் ஆணையத்தை அமைத்துள்ளதாகவும், 2013ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்ட விதிகளில் திருத்தப்பட்டதா என்பது தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தருவதாகவும் கூறினார்.
பின்னர் நீதிபதிகள், அவ்வாறு விதிகள் திருத்தப்பட்டிருந்தால் அதுதொடர்பான விவரங்களையும், உயர் நீதிமன்ற உத்தரவுகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 31ஆம் தேதி தள்ளிவைத்தனர்.
**-வினிதா**
�,