�வன்னியர் இட ஒதுக்கீடு:நீதிமன்றத்தை பெரியார் மூலம் விமர்சிக்கும் ராமதாஸ்

Published On:

| By Balaji

நவம்பர் 1 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதை ஒட்டி பாமகவினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். பேருந்துகள் உடைக்கப்பட்டன. பேருந்துகளை சேதப்படுத்திய பாமகவினர் மீது கொலை முயற்சி வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று (நவம்பர் 13) பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், “மாண்புமிகு நீதிபதிகள் துரைசாமியும், முரளி சங்கரும் வழங்கியிருக்கும் தீர்ப்பு இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களைத் தருவதற்குப் பதிலாக பல புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் எல்லா இட ஒதுக்கீடுகளும் 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன.அந்த வகையில் தமிழ்நாட்டில் வாழும் வன்னிய சமூகத்தின் எண்ணிக்கையும் 1931ஆம்ஆண்டு கணக்கெடுப்பை இன்றைய மக்கள் தொகைக்கு பொருத்தியே கணக்கிடப்படுகிறது.

1957ஆம்ஆண்டு கர்மவீரர் காமராசர் முதலமைச்சராக இருந்த போது ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் 38 சாதியினர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் வன்னிய குல சத்திரியர்கள் ஆவார்கள். அவ்வறிக்கை அந்த 38 சமூகங்களை பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் மிகவும் பின்தங்கியுள்ளவை எனக்குறிப்பிட்டு, அவர்களுடைய கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு முன்னெடுப்புகளை செய்ய வேண்டுவது அவசியம் என பரிந்துரைத்தது.

1970ஆம்ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கை தான் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடுகளுக்கான அடிப்படையாக இருந்தது. அதன் பின்னர் அம்பாசங்கர் ஆணையம் (1983 ஆம் ஆண்டு)பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக பொருளாதார கல்வி நிலைகளை ஆய்வு செய்து அறிக்கைவெளியிட்டது. இந்த இரண்டு அறிக்கைகளும் வன்னிய சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையை உறுதி செய்திருக்கின்றன. மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படை இந்த இரண்டு ஆய்வறிக்கைகளும் தான்.

69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக ஜனார்த்தனம் ஆணையம் ஒரு ஆய்வுநடத்தியது. இந்த ஆய்வு அம்பாசங்கர் ஆணையத்தின் ஆய்வறிக்கையை பரிசீலித்துஅதன் அடிப்படையிலேயே தன் அறிக்கையைத் தந்தது.

ஜனார்த்தனம் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே அருந்ததியினருக்கான இடஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடும் தரப்பட்டது. அந்த இரண்டு இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.ஜனார்த்தனம் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டுதான் உச்சநீதிமன்றம்அந்த இட ஒதுக்கீடுகளுக்குத் தடை வழங்க மறுப்பு தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் வழங்கப்பட்டுவரும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரானஉச்சநீதிமன்ற வழக்கிலும் ஜனார்தனம் ஆணையத்தின் அறிக்கையே 69% இடஒதுக்கீட்டைக் காப்பாற்றியது.

ஜனார்த்தனம்அறிக்கை தமிழக மக்கள் தொகையில் வன்னியர்கள் 13.1% ஆக இருக்கிறார்கள் எனவும், அவர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தரலாம் எனவும் 2012ஆம் ஆண்டுபரிந்துரை செய்திருக்கிறது.

ஆகவேவன்னியருக்கு அளிக்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு மேற்கூறிய ஆய்வுகளின்அடிப்படையில் வழங்கப்பட்டது ஆகும்.அளவுகோல்களின் அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் இன்றி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டது என்பது தவறான கருத்து ஆகும்.

குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வாழும் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சீர்மரபினர் ஆவார்கள். அந்த குறிப்பிட்ட சில சமூகங்கள் தமிழகத்தில் எங்குவாழ்ந்தாலும் சீர்மரபினர் என்ற சான்றிதழைப் பெறலாம் என்று சீர்மரபினர் குறித்த அரசாணை திருத்தப்பட்டது. இது உண்மையான சீர்மரபினருக்கு மிகப்பெரும் ஆபத்தாக முடிந்திருக்கிறது.அரசாணையில் செய்யப்பட்ட இந்த திருத்தத்தைப் பயன்படுத்தி பல்வேறு சமூகங்கள் சீர்மரபினர் என்று சான்றை தமிழகம் முழுவதும்பெற்று வருகிறார்கள். வன்னியர்களுக்கும், சீர்மரபினருக்கும், பிற மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டை இவர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்.

இந்த அபகரிப்பாளர்கள்தான் அடிப்படைப் புள்ளிவிவரங்களும், சான்றுகளும் இல்லாமல் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறது என்ற பொய்யை பொதுவெளியில் பரப்பியது மட்டுமல்லாமல் நீதிமன்றத்துக்கும் கொண்டுசென்றார்கள்.

கெடுவாய்ப்பாக மாண்பமை நீதிமன்றமும் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதாரமாக இருந்த அளவுகோல்கள் குறித்தும், புள்ளி விவரங்கள் குறித்தும் பாட்டாளி மக்கள்கட்சியின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த சான்றுகளை பரிசீலிக்கவில்லை.

நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பு சரியானதாக இருந்தால் மட்டும் போதாது. அது அனைவரும் சரிஎன்று உணரும்படி இருக்க வேண்டும் என்பது ஒரு கூற்று. பாட்டாளி மக்கள் கட்சி அளித்த பல்வேறு எழுத்துப்பூர்வ சான்றுகளையும், விவாதங்களையும் மாண்பமை நீதிபதிகள் ஆழமாகப் பரிசீலித்து, வலுவான காரணங்களின் அடிப்படையில் அவற்றை மறுதலித்தார்கள் என்பதற்கான பதிவுகள் எதையும் 184 பக்கங்களைக் கொண்ட இந்தத் தீர்ப்பில் காண முடியவில்லை”என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

மேலும், “நீதிபதிகள் எழுப்பியிருக்கும் ஐந்தாவது கேள்வியான ”பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றின் மக்கள் தொகை, சமூக, கல்வி நிலைமைகள், அரசுப் பணிகளில் அவர்களுடைய பிரதிநிதித்துவம் ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்கள் இல்லாத நிலையில் இட ஒதுக்கீடு வழங்க இயலுமா?” என்பதில் புள்ளி விவரங்கள் இல்லையென்ற முடிவுக்கு நீதிபதிகள் வந்துவிட்ட பிறகு தான் வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

வன்னியர் இட ஒதுக்கீடு அச்சாதியின் மக்கள் தொகை, சமூக, கல்வி நிலைமைகள், அரசுப் பணிகளில் அவர்களுடைய பிரதிநிதித்துவம் ஆகிய பற்றிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதா? அப்படியானால் அதற்கான தரவுகள் / சான்றுகள் என்ன?” என்று இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருந்தால் அது ஒரு திறந்த கேள்வியாக இருந்திருக்கும். கேள்வி எழுப்பப்பட்ட விதம் விசாரணைக்கு முன்பாகவே மாண்பமை நீதிபதிகள் சில முன்முடிவுகளைக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று எண்ண இடமளிப்பதாக இருக்கிறது.

மாண்பமை நீதிபதிகளின் ஏழாவது கேள்வியான “தெளிவான அளவுகோல்கள் இன்றி வெறும் மக்கள்தொகையின் அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தொகுப்பை மூன்றாகப் பிரிக்க இயலுமா?” என்பதும், வன்னியர் இட ஒதுக்கீடு அளவுகோள்கள் ஏதுமின்றி தரப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வழக்கு தொடங்குவதற்கு முன்னதாகவே அவர்கள் வந்து விட்டார்கள் எனபதைக் காட்டுகிறது.

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது. இதைச் சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. இந்தத் தீர்ப்பை நான் விமர்சனம் செய்யப் போவதில்லை. அந்தப் பணியை தந்தை பெரியாரிடம் விட்டுவிடுகிறேன்”என்று கூறியிருக்கும் ராமதாஸ், கடந்த 6.11.1956 அன்று விடுதலை நாளிதழ் தலையங்கத்தில் தந்தை பெரியார் கூறியதை இங்கே தருகிறேன் என்று குறிப்பிட்டு அதைத் தந்திருக்கிறார்.

“உயர் நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிப் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பது கோர்ட்டை அவமானப் படுத்துவதாகும் (Contempt of Court) என்ற பூச்சாண்டியை இனியாவது அம்பலப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றத்து நீதிபதிகளும் மனிதப் பிறவிகளாதலால், ஆசாபாசங்களுக்கும், சமுதாய உணர்ச்சிகளுக்கும், தவறுகளுக்கும் கட்டுப்பட்டவர்கள். ஜனநாயக சமூகத்தில் உரிமை இருக்கும் போது சாதாரண சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் ஒருவரான நீதிபதியின் தீர்ப்பைத் தவறு என்று கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமை இருக்க வேண்டாமா?” என்று கூறுகிறார் பெரியார். ஆனால் என்னுடைய வேதனை நீதிமன்றத் தீர்ப்பு மட்டுமல்ல. சமூக நீதியின் முழு உரிமையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இயக்கங்களின் மௌனம் தான் என்னை அதிகம் வேதனைக்குள்ளாக்குகிறது. சமூக நீதிக்கான பயணம் நெடியது. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அதனுடைய தொடக்கப் புள்ளி மட்டுமேஆகும்.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டீன் இன்றைய வடிவமும் இறுதியானது அல்ல. வன்னியர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணிகளிலும் 10.5% இட ஒதுக்கீடு கிடைத்தாலும் வன்னியருக்கான இட ஒதுக்கீட்டின் இறுதி நிலை அதுவல்ல. தனியார் துறைகளிலும், தமிழகத்திலுள்ள நடுவண் அரசு நிறுவனங்களிலும் வன்னியர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பின்தங்கிய, மிகப் பின்தங்கிய மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு முழுமையாக செயல்படுத்தப்படும் வரையில் நான் போராடுவேன்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வன்னியர் இட ஒதுக்கீட்டினை மட்டும் ரத்து செய்யவில்லை. இட ஒதுக்கீடு வழங்கவும், உள் இட ஒதுக்கீடு வழங்கவும் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை கேள்வி கேட்கிறது.

இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் உள்ள பல்வேறு சமூகநீதி இயக்கங்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால் சமூகநீதி இயக்கங்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் எல்லா இயக்கங்களும் மௌனத்தின் வாயிலாக இந்தத் தீர்ப்புக்கு ஆதரவளித்திருக்கின்றன.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு எந்த மாற்றமுமின்றி அப்படியே தொடர வேண்டும் என்று சிலர் விரும்புவது இட ஒதுக்கீட்டின் பயன்கள் பரவலாக்கப் படக்கூடாது என்ற தீய எண்ணத்தினால் தான். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய அரசாங்கத்தின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உள்ள வாய்ப்புகளை அனுபவித்த முன்னேறிய வகுப்பினர், பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பயன்களை அடைய விடாமல் தடுத்தனர். பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட பின்னர் பிற்படுத்தப்பட்டோரில் உள்ள முன்னேறிய பிரிவினர்,அதனுடைய பயன்கள் விளிம்பு நிலையிலுள்ள மற்ற பிற்படுத்தப்பட்ட மக்களைச் சென்றடையாமல் பார்த்துக்கொண்டனர். இதற்கு எதிராக நான் நடத்திய இட ஒதுக்கீட்டுப் போராட்டம் வெற்றி பெற்று மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற தொகுப்பு உருவாக்கப்பட்டது.

அத்தொகுப்பு உருவாக்கப்பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கடந்தும்,பல்லாயிரக் கணக்கில் சிறை சென்று, அடக்குமுறையால் பாதிக்கப்ப்ட்டு, உயிர்த் தியாகம் செய்து போராடிய வன்னியர்களை அதன் பயன்கள் முழுமையாகச் சென்றடையவில்லை என்பதற்காகத்தான் நான் மீண்டும் போராடினேன். அதனால் விளைந்த பயனை நீதிமன்றம் இல்லாமல் செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share