இலங்கை நாட்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் விதிக்கப்பட்டிருந்த எமர்ஜென்சி அறிவிப்பை , ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே.
பொருளாதார நெருக்கடியால் அன்றாட வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வரும் இலங்கையர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்த மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து அவசரநிலையை பிரகடனப்படுத்திய கோத்தபய ராஜபக்சே, அதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவையும் அமல்படுத்தினார். இதன் மூலம் யாரையும் எந்த விசாரணையும் இன்றி கைது செய்யும் அதிகாரம் ராணுவத்துக்கு கொடுக்கப்பட்டது. எவருடைய சொத்துக்களையும் பொசிஷன் எடுக்கும் அதிகாரமும் இராணுவத்திடம் அளிக்கப்பட்டது
.
ஆனால் இந்த கட்டுப்பாடுகளைக் கண்டு அச்சப்படாமல் மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவசரநிலை பிரகடனப்படுத்த போடப்பட்ட உத்தரவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஏற்பட்டது.
நேற்று நாடாளுமன்றம் கூடிய நிலையில் அரசுக்கு ஆதரவான சுமார் 40 எம்பிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர். இதனால் பெரும்பான்மை இழந்த அரசாக
கோத்தபய ராஜபக்சே அரசு மாறிவிட்டது.
ஏப்ரல் 6, 7 தேதிகளில் நாடாளுமன்றம் கூடி இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றி விவாதிக்க வேண்டிய நிலையில், ஏப்ரல் 5 நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் விலக்கி கொள்ளப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
.**வேந்தன்**