தேர்தல் நடத்தும் தேதியை நாங்களே முடிவு செய்வோம்: தேர்தல் ஆணையம்

Published On:

| By Balaji

தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும் என்றும், பிற அதிகார அமைப்பினர் இதில் தலையிட வேண்டாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஜி.சி.முர்மு, ‘’தொகுதி வரையறைக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும்’’ என அறிவித்த செய்தி இன்று, தி டிரிபியூன் இதழில் இன்று (ஜூலை 28) வெளியானது. இதேபோன்ற துணைநிலை ஆளுநர் தேர்தல் நடக்கும் காலம் பற்றி இதற்கு முன்பும் பத்திரிகைகளிடம் பேசியிருக்கிறார்.

இதை சுட்டிக் காட்டி இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்,.

“தேர்தல் நேரம் உள்ளிட்ட அரசியல் சாசன விஷயங்கள் முற்றிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வரம்புக்கு உட்பட்டது என துணைநிலை ஆளுநருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். தேர்தல் தேதியை நிர்ணயிப்பதற்கு முன்பாக, தேர்தல் நடத்தும் இடத்தின் சூழல், வானிலை, பிராந்திய, உள்ளூர் திருவிழாக்களால் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து பொருத்தமான அம்சங்களையும் ஆணையம் கவனத்தில் கொள்ளும்.

உதாரணத்துக்கு, தற்போதைய நிலையில், கொரோனா தொற்றுப் பரவல், புதிய கோணத்தில் பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போதைய நிலையில், தொகுதி வரையறை விஷயமும் முடிவெடுப்பதில் முக்கிய அம்சமாக இருக்கும். இதேபோல, மத்தியக் காவல் படைகளை அனுப்புவதற்கான போக்குவரத்து மற்றும் படைகளின் தயார் நிலை ஆகியவையும் முக்கிய அம்சங்களாகும். சம்பந்தப்பட்ட அனைவருடனும் உரிய ஆலோசனைகள் மேற்கொண்டு, விரிவாக மதிப்பீடு செய்த பின்னரே, மூத்த அதிகாரிகள் பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்வார்கள்.

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலத்துக்கு தேர்தல் ஆணையம் பயணம் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினருடனும் விரிவான ஆலோசனைகளை நடத்தும். தேர்தல் ஆணையத்தின் அரசியல் சாசன உரிமையில் தலையிடுவதற்கு ஒப்பானது என்பதால், தேர்தல் ஆணையம் தவிர பிற அதிகார அமைப்புகள், இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்ப்பது முறையாக இருக்கும்” என்று தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share