பெண் எஸ்.பி.யால் பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கு கூடுதலாக கொலை மிரட்டலும் விடப்பட்டதாக காவல்துறை அதிகாரிகளே டிஜிபியிடம் முறையிட்டதை அடுத்து இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார் ஸ்டாலின்.
இது தொடர்பாக இன்று (மார்ச் 5) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலை மிரட்டலைப் பார்த்துக் கொந்தளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 10 பேர் தமிழகக் காவல்துறைத் தலைவரைச் சந்தித்துப் புகாரளித்த பிறகும் – இந்த நிமிடம் வரை சிறப்பு டி.ஜி.பி.யையும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.யையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி பெண்ணினத்திற்கே சாபக்கேடாகி விட்டார்!
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் இன்னும் பழனிசாமியின் சட்ட விரோத உத்தரவுகளை மதித்து பாலியல் தொந்தரவு கொடுத்தவரையும், புகார் கொடுக்க விடாமல் தடுத்தவரையும் தமிழகத் தலைமைச் செயலாளரும், உள்துறைச் செயலாளரும் காப்பாற்றிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது.
பாதிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அந்தஸ்தில் உள்ள பெண் போலீஸ் எஸ்.பி.க்கு கொலை மிரட்டல் விடுக்கும் துணிச்சல் குற்றவாளிகளுக்கு வந்தது எப்படி? இப்படி அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ள இரு போலீஸ் அதிகாரிகளையும் இன்னும் சஸ்பெண்ட் செய்து கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பது எதற்காக? அ.தி.மு.க.விற்கு தேர்தல் வேலை செய்யப் போகிறார்களா? தனக்குச் சிறப்பு டி.ஜி.பி.யின் காருக்குள் நேர்ந்த கொடுமை குறித்து பெண் எஸ்.பி. புகாரளித்து 13 நாட்கள் கழிந்து விட்டன.
நான் கண்டித்து அறிக்கை விட்டு – திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்திய பிறகு, எஸ்.பி.யின் புகார் மீது சி.பி.சி.ஐ.டி வழக்குப் பதிவு செய்து சிறப்பு டி.ஜி.பி.யையும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.யையும் A1 மற்றும் A2-களாக அறிவித்து இன்றோடு 7 நாட்களாகி விட்டன. ஆனாலும் இதுவரை சிறப்பு டி.ஜி.பி.யும், செங்கல்பட்டு எஸ்.பி.யாக இருந்தவரும் இடைநீக்கம் செய்யப்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்த வழக்கில் கைதும் செய்யப்படவில்லை!”என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,
“ தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் ஏற்கனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டது. பரனூர் சுங்கச்சாவடியில் அத்துமீறி பெண் எஸ்.பி. மறிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு, மனித உரிமை ஆணையம் உள்துறைச் செயலாளருக்கும் – தமிழக டி.ஜி.பி.க்கும் நோட்டீஸ் அனுப்பி விட்டது. மேலும், தமிழக டி.ஜி.பி.யை நேற்றைய தினம் 10 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேரில் சந்தித்து “பெண் எஸ்.பி.க்கு கொலை மிரட்டல்” எனப் புகாரும் அளித்து விட்டார்கள். சக பெண் அதிகாரிக்கு நீதிகேட்டு முறையிட்ட அந்தப் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் தார்மீக, அறவுணர்ச்சியை நான் பாராட்டுகின்ற நேரத்தில் – தமிழகமெங்கும் “இருவரையும் கைது செய்” என்ற தாய்மார்கள் போராட்டக்குரல் கேட்பதை உணர முடிகிறது. ஆனாலும் இந்த இரு குற்றவாளிகளையும் முதலமைச்சர் பழனிசாமியும் – அவரது பேச்சை இன்னும் கேட்டுக் கொண்டிருக்கும் உள்துறை செயலாளரும், தலைமைச் செயலாளரும் அரண் போல் நின்று காப்பாற்றி வருவது நியாயமா?
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் இவர்கள் சக ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு நடைபெற்ற இந்தக் கொடுமையை இன்னும் வேடிக்கை பார்ப்பதா? ஆகவே முதலமைச்சர் பழனிசாமியின் பிடியிலிருந்து தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் வெளியில் வந்து – பெண்ணினத்தின் – அதிலும் ஒரு பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை தாமதித்தால் – தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றும் வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.
**-வேந்தன்**�,