ஒவ்வொரு வருடமும் கச்சத்தீவில் நடக்கும் அந்தோணியார் திருவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாட்டு மீனவர்களும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்களும் கலந்து கொள்வார்கள்.
ஆனால் இந்த வருடம் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (பிப்ரவரி 4) கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில்…”கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வோராண்டும் பிப்ரவரி/மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவ பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.
பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளனர். கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை நீங்கள் வலியுறுத்திட வேண்டும்.
இம்முயற்சி இரு நாட்டு மக்களிடையே நல்லுறவைப் பேணுவதை உறுதி செய்யும் என்று நம்புகிறேன்”என்று அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவரும் கட்சியின் பொருளாளருமான டி.ஆர். பாலு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து ஸ்டாலினின் கடிதத்தை வழங்கினார்.
**வேந்தன்**