சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு (EIA 2020) அறிக்கைக்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இந்த வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டதால், அதிலுள்ள நுட்பமான வார்த்தைகளை பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
EIA 2020க்கு எதிராக மீனவர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு கடந்த 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக எழுத்துப்பூர்வமான விளக்கத்தைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.
வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 19) காணொலி காட்சி மூலம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வரைவு அறிக்கைக்கு மற்ற மாநில உயர் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. ஆகவே, அறிக்கை மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது” என தெரிவிக்கப்பட்டது.
மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். ஆகவே, இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் தேவை எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**எழில்**
�,