கல்விக்கடன் தயக்கம் காட்டும் வங்கிகள்: அரசுக்கு வலியுறுத்தல்!

politics

கல்விக் கடன் எந்த மாணவர்களுக்கும் மறுக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மந்த நிலையைக் காரணம் காட்டி, கல்விக் கடன்களை வழங்க பொதுத்துறை வங்கிகள் தயங்குவதாகச் செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில், மாணவர்களுக்குக் கல்விக் கடன் மறுக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்,

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் தமிழகம்தான். இதற்குக் காரணம் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதும், தேவையானவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கப்படுவதும்தான்

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ள ரூ.94,000 கோடி கல்விக் கடனில், 21.50% அதாவது, ரூ.20,200 கோடி தமிழக மாணவர்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கடன்களைப் பெறுவதிலும் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது.

ஆனால், கடந்த 2019-20ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2020-21ஆம் ஆண்டில் தமிழகத்தில் வழங்கப்பட்ட கல்விக் கடனின் அளவு வெகுவாகக் குறைந்திருக்கிறது. 2019-20ஆம் ஆண்டில் தமிழகத்தில் ரூ.2,420 கோடி கடன் வழங்கப்பட்ட நிலையில், கடந்த நிதியாண்டில் அது ரூ.1,478 கோடியாகக் குறைந்துவிட்டது. இது 39% வீழ்ச்சி ஆகும்.

கடந்த ஆண்டில் சுமார் 40 விழுக்காட்டினருக்குக் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருப்பதையே இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. இதே நிலை நீடித்தால், நடப்பாண்டில் கல்விக் கடன் அளவு மேலும் குறையும். இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல், உயர்கல்வி கற்கும் வாய்ப்பை இழப்பார்கள். அது மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

கொரோனா காரணமாக வேலையின்மை மற்றும் ஊதிய குறைப்பால் கல்விக் கடன் பெறுவதற்காக வங்கிகள் நிர்ணயித்துள்ள ஆண்டு வருமான வரம்பைப் பெரும்பான்மையான பெற்றோர்களால் எட்ட முடியவில்லை.

இதைக் காரணம் காட்டி, பெரும்பான்மையான மாணவர்களுக்குக் கடந்த ஆண்டில் கல்விக் கடன் வழங்க பொதுத்துறை வங்கிகள் மறுத்திருக்கின்றன. அதனால்தான் தமிழகத்தில் கல்விக் கடன் 39% வீழ்ச்சியடைந்திருக்கிறது.

வங்கி அதிகாரிகளின் நிலையிலிருந்து பார்த்தால், கல்விக் கடன் வழங்கத் தயங்குவதற்கு, நியாயம் என்று நம்பக்கூடிய காரணங்கள் பல உள்ளன. கல்விக் கடனைப் பொறுத்தவரை வாராக்கடனின் அளவு 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி வெறும் 15% ஆக இருந்தது. நடப்பாண்டு மார்ச் மாத இறுதியில் அது 16.50% ஆக அதிகரித்துவிட்டது.

இதையெல்லாம் மனதில் கொண்டுதான், இத்தகையச் சூழலில் கல்விக் கடன் வழங்கினால், அதைத் திருப்பி வசூலிக்க முடியாதோ என்ற அச்சத்தில் கடன் வழங்க வங்கிகள் தயங்குகின்றன. ஆனால், கொரோனாவால் பல பெற்றோரின் ஆண்டு வருமானம் குறைந்திருப்பதும், பலர் வேலை இழந்திருப்பதும் தற்காலிகமானதுதான். கொரோனா பாதிப்புகள் விலகி, இயல்பு நிலை திரும்பும் போது அனைத்தும் சரியாகி விடும்; கல்விக் கடன்கள் திரும்ப வசூலாகிவிடும்.

கொரோனா பாதிப்பு காரணமாக 2019-20ஆம் ஆண்டில் 7 விழுக்காட்டுக்கும் கூடுதலாகப் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டிய இந்தியா, 4.2% வளர்ச்சியை மட்டுமே எட்டியது. 2020-21ஆம் ஆண்டில் மைனஸ் 7.3% என்ற அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. ஆனாலும், அதிலிருந்து மீண்டு வரும் இந்தியப் பொருளாதாரம், கடந்த ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 11.50% வளர்ச்சியை எட்டியுள்ளது. நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.40% முதல் 10.10% வரை வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியப் பொருளாதாரம் இவ்வளவு வேகமாக மீட்சிப் பாதையில் பயணிக்கும்போது ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; ஊதிய விகிதங்கள் கணிசமாக உயர்த்தப்படும் என்று உறுதியாக நம்பலாம். இப்போது ஏற்பட்டுள்ள தற்காலிகப் பின்னடைவை மட்டும் அடிப்படையாக வைத்து ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு அவசியத் தேவையான கல்விக் கடனை மறுக்கக் கூடாது.

எனவே, வங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடப்பாண்டில் அதிக எண்ணிக்கையில் கல்விக் கடன்களை வழங்க வேண்டும். வங்கிகளுக்குத் தேவையான உத்தரவாதத்தை அளித்து, எந்த மாணவருக்கும் வருமானம் குறைவு போன்ற காரணங்களைக் காட்டி கல்விக் கடன் மறுக்கப்படாமல் வழங்கப்படுவதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *