15வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று சபாநாயகர் உரை நிகழ்த்தினார்.
அப்போது 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை சட்டப்பேரவை 167 முறை கூடியதாகத் தெரிவித்த அவர் சட்டமன்ற வரலாற்றிலேயே அனைத்து நாட்களும் அவைக்கு வந்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்று புகழாரம் சூட்டினார்.
அதுபோன்று எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், முக்கிய பிரச்சினைகளைக் கவனத்திற்குக் கொண்டுவந்து சிறப்பாகச் செயல்பட்டார் என்று பாராட்டு தெரிவித்தார்.
மேலும் இந்த சட்டப்பேரவையில் அதிக கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர்களில் கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார். திமுக எம்எல்ஏ மஸ்தான் இரண்டாமிடத்தில் உள்ளதாகவும், அதிகபட்சமாக மின்துறை அமைச்சர் தங்கமணி 102 வினாக்களுக்குப் பதில் அளித்து முதலிடத்தில் உள்ளதாகவும், அமைச்சர் எஸ் பி வேலுமணி 97 வினாக்களுக்குப் பதில் அளித்து இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
79 கேள்விகளுக்குப் பதிலளித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதுபோன்று, தமது அரசுக்கு ஒத்துழைப்பு அளித்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
**-பிரியா**�,