திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. அதேபோல நலத்திட்ட உதவிகள், நிவாரணப் பணிகள் என களத்தில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொற்று உறுதியாகிறது. அமைச்சர்கள் தங்கமணி, நிலோபர் கபில் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன் ஆகியோர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும், கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சி.வெ.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபோலவே கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி. காய்ச்சல், இருமல் தொந்தரவு காரணமாக ஓசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து செங்குட்டுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வரின் ஆய்வுக்கு கூட்டத்திற்கு அழைப்பு இல்லை என்று கூறி செங்குட்டுவன் தலைமையில் நேற்று முன் தினம் எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், பி.முருகன், எஸ்.ஏ.சத்யா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.மணிமேகலை நாகராஜ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில். செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு ஆர்.டி. அரசு ஆகியோர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர். இந்த நிலையில், தற்போது மேலும் இரண்டும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் 4 அமைச்சர்கள் உள்பட 14 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
**எழில்**
�,”