திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து சில மாதங்கள் ஓய்வின்றி பணிகளில் ஈடுபட்ட நிலையில், தேர்தலுக்குப் பிறகு வெளிநாடு சென்று சில நாட்கள் ஓய்வெடுக்கலாமா என்று அவரது குடும்பத்தில் ஆலோசனை நடந்தது.
கொரோனா தாக்கம் பல நாடுகளில் இருப்பதால் கொரோனா தாக்கம் மிகக் குறைவான மாலத்தீவுக்கு செல்லலாமா என்றும் ஆலோசித்தார்கள். இதுபற்றி [ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளிநாட்டில் தயாரிப்பு?](https://minnambalam.com/politics/2021/04/13/37/next-dmk-cabibet-stalin-ready-to-make-in-foreign-country) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியிலேயே ஸ்டாலின் வெளிநாடு செல்ல தயங்குகிறார் என்றும், அதுகுறித்து முடிவெடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
அதுபோலவே வெளிநாட்டுப் பயணத் திட்டத்தை ரத்து செய்த ஸ்டாலின்… குடும்பத்தினரோடு கொடைக்கானலில் ஓய்வெடுக்கத் திட்டமிட்டு இன்று (ஏப்ரல் 16) சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்படுகிறார். மதுரை வரை விமானத்தில் சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்கிறார்கள்.
துர்கா ஸ்டாலின், செந்தாமரை , கிருத்திகா உதயநிதி, இன்பன் உதயநிதி, தன்மயா உதயநிதி, நிலானி சபரீசன், நளன் சபரீசன் என தனது மனைவி, மகள், மருமகள், பேரக் குழந்தைகளோடு கொடைக்கானல் செல்கிறார் ஸ்டாலின். இவர்களைத் தொடர்ந்து இன்னொரு விமானத்தில் மகன் உதயநிதி ஸ்டாலினும், மாப்பிள்ளை சபரீசனும் கொடைக்கானல் செல்கிறார்கள்.
16ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதி வரை கொடைக்கானலில் குடும்பத்தினரோடு தங்கியுள்ள ஸ்டாலின்… ‘திமுக அரசு ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பதவியேற்க வேண்டிய அமைச்சர்களின் பட்டியலையும் தயார் செய்கிறார்” என்கிறார்கள் நம்பிக்கையோடு திமுகவினர்.
**-வேந்தன்**
�,