ஜெ. அன்பழகன் கலந்துகொள்ளாத திமுக மாசெக்கள் கூட்டம்!

Published On:

| By Balaji

கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில், ஜெ. அன்பழகன் இல்லாத முதல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுகவில் இன்று (ஜூன் 14) நடந்தது. இந்தக் கூட்டம் நடப்பதற்குக் காரணமானவரும் ஜெ. அன்பழகனே.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நடந்த இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஜெ. அன்பழகன் உள்ளிட்ட மறைந்த திமுக முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

முதல் தீர்மானமாக, “சென்னை மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் தன் உடல்நிலையைவிட மக்களின் பசிப்பிணி நீக்குவதே முதன்மையானது என்கிற சீரிய பொதுநல சிந்தனையுடன், என்றென்றும் தலைமையின் வழிகாட்டுதலை சிறிதும் வழுவாமல் நிறைவேற்றுபவராகக் களப்பணியாற்றி, உடல்நலன் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 10-6-2020 அன்று மறைவெய்தி, கழகத்தினர் அனைவரையும் கண்ணீரில் மிதக்கவிட்டுள்ளார்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் சென்னை மாவட்ட தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கி- மிசா சிறைவாச சித்திரவதைகளை நமது தலைவர் தளபதி அவர்களுடன் ஏற்றுக்கொண்டு கழகத்தைக் கட்டிக்காப்பதில் உறுதியாக விளங்கிய தனது தந்தை பழக்கடை ஜெயராமனின் அடியொற்றி, ஜெ.அன்பழகன் அவர்களும் இளம் வயது முதலே கழகப்பணியில் மிகுந்த ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தலைவர் கலைஞர் அவர்களைத் தனது தந்தையின் இடத்தில் வைத்துப் போற்றியவர். தியாகராயர் நகர் பகுதியிலும், ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்டத்திலும், பிறகு சென்னை மேற்கு மாவட்டத்திலும் கழகத்திற்குச் சிறப்பாக வலுவூட்டியவர்.

தலைவர் தளபதி அவர்கள் இளைஞரணிச் செயலாளராக இருந்த காலம்தொட்டே அவரது நம்பிக்கை மிகுந்த உடன்பிறப்பாக, கொள்கைத் தோழனாக, இயக்கத்தின் இலட்சிய சகோதரன் என்கிற உணர்வுடன் நெருங்கிப் பழகி, உரிமையுடன் கருத்துகளை எடுத்துரைக்கக்கூடியவர் ஜெ.அன்பழகன். 2001, 2011, 2016 என 3 முறை சட்டமன்ற உறுப்பினராக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி உறுப்பினராக பேரவையில் மக்கள் நலன் குறித்து முழங்கியவர். தலைவர் கலைஞர் குறித்து ஆளுங்கட்சியினர் அவதூறாகப் பேச முனைந்த போதெல்லாம், நொடிகூட தாமதிக்காமல் எழுந்து நின்று, எரிமலையாய்க் குமுறி எதிர்ப்பினைப் பதிவு செய்தவர்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் உள்பட தனது மாவட்டத்திற்குட்பட்ட நிகழ்வுகளை மிக பிரம்மாண்டமான முறையில், எழிலையும் எழுச்சியையும் கூட்டி, நடத்திக்காட்டி அனைத்து உடன்பிறப்புகளின் உள்ளங்களிலும் உயர்வான இடம் பெற்றவர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைவர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவினையும், அதனையொட்டி இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தினையும், அகில இந்தியத் தலைவர்கள் பலரும் வியந்து போற்றிடும் வண்ணம் நடத்திக் காட்டியவர்.

கழக ரத்தம் பாய்ந்த கட்டுடல், கலைஞர் ஒருவரே தலைவர் என்ற கடமை உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் கட்டுப்பாடு, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் கனிவு கலந்த துணிவு, மனதில் பட்டதை ஒளிக்காமல் எடுத்துரைக்கும் மாண்பு என கண்ணியமும் உண்மையும் மிக்க உடன்பிறப்பாக கடைசிமூச்சுவரை கழகத்தை முன்னிறுத்திச் செயல்பட்டவர் ஜெ.அன்பழகன்.

கழகத் தலைமையின் கட்டளையை நிறைவேற்றும் உடன்பிறப்பாக, மக்கள் நலனில் மாறாத அக்கறை கொண்டு செயலாற்றும் பொதுநலவாதியாக, தன் உயிரைவிட பட்டினிச்சாவினால் உயிரிழப்புகள் ஏற்படாதபடி காப்பதே முதன்மையானது என்கிற இலட்சிய உறுதியுடன் சளைக்காமல் களப்பணியாற்றி, கழகம் என்றென்றும் மக்கள் நலன் காத்திடும் இயக்கம் என்பதை, தன்னுடைய உயிரை ஈந்து தமிழ் மண்ணுக்கு நிரூபித்துள்ள தியாகச்சுடர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு இந்தக் கூட்டம் வீரவணக்கம் செலுத்தி, அவரது குடும்பத்திற்குக் கழகம் என்றும் துணை நிற்கும் என்ற உறுதியுடன், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மேலும் தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின பொதுச் செயலாளர் சிங்கார இரத்தினசபாபதி, தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றுறுதியும் கொண்டவரான பாவலர் க.மீனாட்சிசுந்தரம், திமுகவின் நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் அ.அம்பலவாணன் மறைவு, மறைந்த திமுக பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகனின் மகள் மணமல்லி ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share