ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரு தரப்புக் கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீடானது இழுப்பும் பறிப்புமாக தொடரும் நிலையில், இடதுசாரிகளுக்கான தொகுதிகள் இன்னும் இறுதியாகவில்லை.
திமுக அணியில் இருக்கும் சிபிஐ, சிபிஐ-எம் கட்சிகள் அகில இந்தியக் கட்சிகளாகவும் இருப்பதால், நாடளவிலான இடத்தை விட்டுவிடக்கூடாது என அவை இரண்டும் தீவிரம் காட்டுகின்றன. ஏனென்றால் அகில இந்தியக் கட்சி எனும் அந்தஸ்தை இழக்கும் நிலையையும் இரண்டு இடதுசாரி கட்சிகளுமே சந்தித்தன. திரிபுரா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் அடுத்தடுத்து ஆட்சியை இழந்ததுடன், நாடாளுமன்றத்திலும் இரு கட்சிகளும் வலுவிழந்தன.
அடுத்த தலைமுறை இடதுசாரிகளின் வருகையை அடுத்து உற்சாகமடைந்திருக்கும் இரு கட்சிகளும் பழைய வலுவை மீட்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. தேர்தல் வெற்றியானது அவர்களுக்கு முன்னைவிட இப்போது முக்கியமானதாக இருக்கிறது. நாடாளுமன்ற இடங்கள் குறைந்த பின்னர் சட்டமன்றத்தில் வலுவைக் கூட்டினால்தான் தேசியக் கட்சி அங்கீகாரத்தைத் தக்கவைக்க முடியும் எனும் நிர்பந்தம்! இந்த பின்னணியில்தான் கடந்த முறை தமிழ்நாட்டில் மக்கள்நலக் கூட்டணியை அமைப்பதில் அதீத ஆர்வம் காட்டின. (அது எங்கோ போய் நின்றது, தனிக்கதை!) இப்போது, திமுக அணியில் இரட்டை இலக்கத்தைக் கேட்ட இரு இடதுகளுக்கும் திமுக ஒதுக்க முன்வந்ததோ, சிபிஐ கட்சிக்கு 5, சிபிஐ-எம் கட்சிக்கு 6 தொகுதிகள்தான்; திமுகவின் உறுதிப்பாட்டைப் பார்த்த சிபிஐ-எம் கட்சி, முன்னாள் ம.ந.கூ. சகாக்கள் இணைந்து பேசலாமா என முயன்று பார்த்தது.
அகில இந்திய அரசியல் சூழல், முன்னெப்போதும் இல்லாதபடி அதனோடு பிணைந்திருக்கும் தமிழக அரசியல் ஆகியவை காரணமாக, திருமாவளவன் அது சரிவராது என ஏற்கவில்லை. சிபிஐ கட்சியும் ’எம்’ கட்சியின் நிலைப்பாட்டை ஆமோதிக்கவில்லை. ஆனாலும் சிபிஐ-எம் கட்சி தனக்கான நியாயங்களுடன் கூடுதல் இடங்களைப் பெறுவதற்காக, உரிமைக்கோபத்துடன் முரண்டு பிடித்து நிற்கிறது.
தோழர்கள் இறங்கிவரவேண்டும் என அறிவாலயமும், கருப்பு சிவப்பு கொஞ்சம் விட்டுத்தந்தால் என்ன ஆகிவிடும் என (சிபிஐ-எம் அலுவலகம் அமைந்துள்ள)’வைத்தியராமன் தெரு’ தோழர்களும் மௌனமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
**- பாலசிங்கம்**
�,