கர்நாடக ஹிஜாப் வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதையொத்த வழக்கொன்றில், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? அல்லது மதரீதியாக பிளவுபட்ட நாடா? என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், கடந்த 1947ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தின்படி, இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை.
கடந்த 1970ஆம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம், 1972 ஆண்டில் ரத்து செய்த போதும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
அதனால், எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோயில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழைவு வாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அந்த விளம்பரப் பலகையில் கோயிலுக்கு வரும் போது எந்தவிதமான ஆடைகள் அணிந்து வரவேண்டும் என்றும் அந்த விளம்பரப்பலகையில் சுட்டிக்காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, இன்று(பிப்ரவரி 10) பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் மரபுபடி உடை அணிந்து வர வேண்டும் எனவும், தஞ்சை, மதுரை போன்ற கோயில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருவதாகவும், வெளிநாட்டவர்கள் அனுமதிக்க கூடாது என்றும் வாதிட்டார்.
பல கோயில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நாட்டில் ஹிஜாப், கோயில்களில் வேட்டி ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மத ரீதியாக பிளவுபட்டதா என கேள்வி எழுப்பினர்.
அனைத்து கோயில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா? ஆகம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குறிப்பிட்ட உடை தான் அணிய வேண்டும் என மரபு உள்ளதா? எந்த கோயிலில் உள்ளது?
அநாகரீகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோயில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் ரத்து செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த கூடாது. இது மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போல் உள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.
**-வினிதா**
ஹிஜாப்- வேட்டிக்காக போராட்டம்: தலைமை நீதிபதி வேதனை!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel