டெல்லியில் உள்ள 5 மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜக படு தோல்வி அடைந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள ரோகினி, ஹாலிமர்பாக், திரிலோக்புரி, கல்யாணபுரி, சௌகான் பங்கர் ஆகிய 5 இடங்களுக்கான மாநகராட்சி வார்டு தேர்தல் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்றது. இதில் 50 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகின. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியிலிருந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் 5 வார்டுகளில் 4ல் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. ஒரு வார்டில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் போட்டியிட்ட 5 வார்டுகளில் ஒன்றில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. 2022ல் டெல்லியில் நடைபெறும் தேர்தலுக்கு முன்மாதிரி, இந்த வார்டு தேர்தல் என்று கருதப்பட்ட நிலையில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
அதேசமயத்தில் கடந்த 3 சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தொடர்ந்து வெற்றி பெற்றாலும், மாநகராட்சி வார்டு தேர்தலில் வெற்றி பெறாமல் இருந்துவந்தது. இந்நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலில் 4 இடங்களைப் பிடித்துள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இங்கு வெற்றி வாய்ப்பை பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் டெல்லியில் தோல்வி அடைந்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
**-பிரியா**
�,