ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் முதலில் கடந்த மே 10 முதல் மே 24 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஊரடங்கு பலன்கள் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை. இதனால் ஊரடங்கைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது.
இதன் எதிரொலியாக மே 31 வரை தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜூன் 7, ஜூன் 14, ஜூன் 21 என மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
கடந்த முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, பாதிப்பு அதிகமாக உள்ள கோவை, சேலம் ,ஈரோடு, கரூர், தஞ்சை ஆகிய 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல்வரைச் சந்தித்து கொரோனா நிவாரண தொகை வழங்கிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் படிப்படியாகத் திறக்க வேண்டும். அரசின் கட்டுப்பாடுகளை வியாபாரிகள் கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கலாம். கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு தற்போது ஏறத்தாழ 1,000 ஆக உள்ளதால் இங்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியாக தளர்வுகள் வழங்கலாமா என ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
அதுபோன்று, பொதுப் போக்குவரத்தைக் குறைவான பயணிகளுடன் இயக்குவது, ஏசி வசதிகள் அல்லாமல் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறப்பது, சினிமா மற்றும் சின்னதிரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி உள்ளிட்ட மற்ற தொழில்களுக்குத் தளர்வுகள் வழங்கப்படுவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**
�,