குரல் பரிசோதனைக்குத் தயாரா? செல்லூர் ராஜூவுக்கு ஆடியோ தொண்டர் சவால்!

Published On:

| By Balaji

மதுரையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் சக்திவேல்ராஜன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் குவைத்தில் இருந்து பேசியதாக ஒரு ஆடியோ சமூக தளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.

“ கட்சியில அம்மாக்கு அடுத்தபடியா சின்னம்மானுதானே அடையாளம் கொண்டுவந்திருக்கோம். உங்களைப் போல சீனியர்லாம் இதை எடுத்துச் சொல்ல வேணாமாண்ணே…” என்று சக்திவேல் கேட்க அதற்கு செல்லூர் ராஜூ, “நாங்களும் அதைத்தான் விரும்புறோம். அதுக்கு முறையா போகணும் தம்பி. இல்லேன்னா மொத்தமா இழந்துட்டுப் போயுடுவோம். அவங்க கைப்பத்திட்டு போயிடுவாங்க தம்பி. அதுக்காகதான் கம்முனு இருக்கோம். அதெல்லாம் நடந்துக்கிட்டுதான் இருக்கு”என்று பதிலளித்திருந்தார். மேலும் ஜெயக்குமாரின் தந்தை தொடர்பாகவும் சில சர்ச்சைக் கருத்துகளை சொல்லியிருந்தார்.

இந்நிலையில் டிசம்பர் 3 பிற்பகல் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ,

”இன்று சமூக வலை தளங்களில் நான் பேசியதுபோல என் பெயரை வைத்து ஒரு ஆடியோ வருகிறது. அந்த குரல் என்னுடையது அல்ல. மேலும் அவர் குவைத்தில் இருந்து பேசுவதாகவும், நான் இரவு ஒன்றரை மணிக்கு பேசுவதாக கூறுகிறார். இரவு ஒன்றரை மணிக்கு நான் பேசவில்லை.

அதிமுகவின் வளர்ச்சி பிடிக்காத சமூக விரோதிகள் இதுபோல தகவல்கள் பரப்புகிறார்கள். தலைமையிடம் ஆலோசித்து இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுப்பேன். நகர்ப்புற தேர்தல் வரும் நிலையில் தொடர்ந்து இதுபோல அதிமுகவினரை குறிவைத்து இப்படி சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன. இதில் ஆளுங்கட்சியின் சதியா வேறு யார் சதியா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்”என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார் செல்லூர் ராஜூ.

ஆனால் உடனடியாக இதற்கு செல்லூர் ராஜூவிடம் பேசிய தொண்டர் சக்திவேல் ராஜன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அவர் தனது சமூக தளப் பக்கத்தில், “செல்லூர் ராஜூ அண்ணனுக்கு இப்ப கூட தைரியம் இல்லை. நான் ஆடியோவில் பேசவில்லை, இரட்டை தலைமையில் கட்சி சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது, கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்க என் குரலில் யாரோ பேசி இருக்கின்றனர் என தெரிவித்திருக்கும் அண்ணன் அவர்களே… உங்கள் குரலில் தான் அடியேனோடு செல்லூர் ராஜூ பேசினார் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, குவைத் நேரப்படி காலை 11 மணி இந்திய நேரப்படி மதியம் ஒன்றரை மணிக்கு தான் உங்கள் குரலில் செல்லூர் ராஜூ பேசினார் என்பதையும் இரவு ஒன்றரை அல்ல என தாங்களிடம் பேசிய அடியேன் எம் சக்திவேல் ராஜன் கூறிக்கொள்கிறேன்”என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பாக குவைத்தில் இருக்கும் சக்தில்வேல் ராஜனையே தொடர்புகொண்டு பேசினோம். செல்லூர் ராஜுவின் மறுப்பு பற்றி கேட்டோம்.

“அந்த ஆடியோவில் இருக்கும் குரல் தன்னுடையது அல்ல என்று சொல்கிறார் செல்லூர் ராஜு. அவர் உடனடியாக போலீசுக்கு போகட்டும். என் மீது புகார் கொடுக்கட்டும். இந்த ஆடியோவில் உள்ள எனது குரல், அவரது குரல் இரண்டையும் குரல் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். அப்போது உண்மை தெரியும். செல்லூர் ராஜூ அன்ணனுக்கு நான் சவால் விடுகிறேன். அவர் போலீசுக்கு போகட்டும்” என்கிறார்.

**-வேந்தன்**

[சசிகலாவுக்கான வேலைகள் நடந்துக்கிட்டுதான் இருக்கு- உடைத்துப் பேசிய செல்லூர் ராஜூ](https://minnambalam.com/politics/2021/12/03/23/sasikala-edapadi-ops-sellur-raju-phone-talk-with-admk-worker)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share