pபத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!

Published On:

| By Balaji

2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில், கடந்த ஜூன் 24ஆம் தேதி உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளைத் தமிழக அரசு திரும்பப் பெறும் என்று அறிவித்தார்.

அதன்படி தமிழக அரசு இன்று (ஜூலை 29) வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிக்கைகளில் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

தி இந்து நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், தினமலர் நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ஆனந்த விகடன் வார இதழின் ஆசிரியர் மீது 9 வழக்குகளும், ஜூனியர் விகடன் இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும், நக்கீரன் இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், முரசொலி நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்குகளும், தினகரன் நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் போடப்பட்டிருந்தன.

இது தவிர புதிய தலைமுறை, நியூஸ் 7, சத்யம், கேப்டன், என்டிடிவி, டைம்ஸ் நவ், கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் பத்திரிக்கையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share