முயற்சியைக் கைவிடாத முதல்வர்: முன்னணி நிறுவனங்களுக்குக் கடிதம்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. இந்த நிறுவனங்களை தமிழகத்துக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் சிறப்புப் பணிக்குழுவும் அமைக்கப்பட்டது.அதுபோலவே ஆப்பிள், ஹெச்பி, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், வானூர்தி நிறுவனங்களுக்கும் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.

சிறப்புக் குழுவின் பேச்சுவார்த்தையில் ஜூன் தொடக்கத்திற்குப் பிறகு சுணக்கம் ஏற்பட்டது, முதல்வரும் எந்த நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதவில்லை. இதுதொடர்பாக நாம் வெளியிட்ட [செய்தியில்](https://minnambalam.com/politics/2020/07/10/27/special-committee-to-make-investment-negotiation-is-stop), “தொழில் நிறுவனங்களுடன் தமிழக தரப்பில் பேசினால், அடிக்கடி இவ்வாறு பேசி எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். 2021 மே மாதத்திற்குப் பிறகுதான் தமிழகத்தில் முதலீடு செய்வது பற்றி நாங்கள் முடிவுக்கு வருவோம் என அவர்கள் கூறிவிட்டனர்” என்று சொல்லியிருந்தோம். எனினும், நம்பிக்கையை கைவிடாமல் தமிழக அரசு தொடர்ந்து முதலீட்டை திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு நேற்று (ஜூலை 13) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அண்மையில் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக் காட்டுகிறது. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெடக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் (மற்றும்) முதன்மைச் செயல் அலுவலர் பெரட்ரிக் டபிள்யு ஸ்மித் மற்றும் யுபிஎஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் டேவிட் பி அப்னே, ஆகிய 2 முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவன தலைவர்களுக்கும் மற்றும் சவுதி அரெம்கோ நிறுவனத்தின் தலைவர் அமின் எச் நாசர், எக்ஸன் மொபில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் டாரன் வுட்ஸ் மற்றும் சிபிசி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜியா ருயே ஊ ஆகிய 3 முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாகவும்,

“அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது” என்றும் தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share