சென்னை பெருநகர மாநகராட்சியின் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று(ஏப்ரல் 9) தாக்கல் செய்தார்.
இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இயந்திரப் பொறியியல் துறை மீதான அறிவிப்பில், பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளுடன் வாகன நிறுத்துமிடம் அமைத்துத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டலம் 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகியவற்றிற்கு உட்பட்ட பகுதிகளில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களை நிறுத்தி வைக்க 7.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகன நிறுத்தும் இடத்திற்கான கட்டடம் கட்டப்படும்.
மண்டலம் 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகியவற்றிலுள்ள லாரி நிலையங்களை மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதியதாகக் கட்டமைப்பு செய்ய 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சாலைகள் துறை மீதான அறிவிப்பில், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 39.87 கிலோ மீட்டர் நீளமுடைய 59 சாலைகள் 37.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கப்படும்.
தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன் வாயிலாக 161.94 கிலோ மீட்டர் நீளமுடைய 951 சாலைகள் ரூ.109.61 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் மூன்று மாத காலத்திற்குள் முடிக்கப்படும்.
மழைக்காலங்களில் பாதிக்கப்பட்ட சென்னை மாநகர சாலைகளைப் புனரமைக்க மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் 2021-22ன் கீழ் 110.90 கிலோமீட்டர் நீளத்திற்கு 646 உட்புற சாலைகள் ரூ.65.97 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் மூன்று மாத காலத்திற்குள் முடிக்கப்படும்.
சாலை பெயர் பலகைகள் டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்படும். மொத்தம் 4,681 எண்ணிக்கையிலான சாலை பெயர் பலகைகள் டிஜிட்டல் முறையில் மாற்ற வேண்டியுள்ளது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இதற்காக ரூ.8.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்புறம் மாற்றுத்திறனாளிகள் கடல் அலை அருகில் சென்று பார்வையிட நிரந்தர பாதை அமைக்கும் பணிக்குச் சிங்காரச் சென்னை திட்டம் 2.0 ல் ரூ.1.14 கோடி பெறப்பட்டுள்ளது. இந்த பணிகள் துவங்கப்பட்டு இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கப்படும்.
சிங்காரச் சென்னை 2.0 நிதியில் 40.80 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.184.67 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இந்த நிதியாண்டில் முடிக்கப்படும். மேலும் இரண்டு கட்டமாக 20.70 கிலோமீட்டர் நீளத்திற்கு 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உலக வங்கி நிதியின் கீழ் 43 சிப்பங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடப்பு நிதி ஆண்டிற்குள் முடிக்கப்படும்.
பருவமழை 2020 மற்றும் 2021ன் போது வெள்ளத்தினால் மிகவும் பாதிப்படைந்த இடங்களில் தமிழக அரசின் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியிலிருந்து வரப்பெற்ற தொகையிலிருந்து பல்வேறு இடங்களில் ஆறு சிப்பங்களில் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடப்பு நிதியாண்டில் முடிக்கப்படும்.
சென்னை மண்டலம் 1, 2, 3, 6, 7 மற்றும் 8 ஆகிய பகுதிகளில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 46 சிப்பங்களாகப் பிரிக்கப்பட்டு நடப்பு நிதி ஆண்டில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் துரிதமாக அமைக்கப்படும்.
நடப்பு நிதியாண்டிலிருந்து மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடை பெறுவதற்கு ஏதுவாக மண்டலம் 4 மற்றும் மண்டலம் 6ல் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்ட நிதியின் கீழும் மற்ற மண்டலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி நிதியின் மூலம் வருடம் முழுவதும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகரை அழகுபடுத்தும் விதமாகவும் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை மாநகராட்சியால் 722 பூங்காக்கள் மற்றும் 220 விளையாட்டு திடல்கள் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 111 பூங்காக்கள் தன்னார்வலர்கள் மற்றும் ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்கள் மூலம் தத்தெடுப்பு முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல் களை பராமரிக்கும் பணிகளுக்கு நடப்பு நிதியாண்டில் 16.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் 2,50,000 நாட்டு மரக்கன்றுகள் நடப்படும்.
நடப்பு நிதியாண்டில் சிங்காரச் சென்னை 20 திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பங்களிப்புடன் சாலை தடுப்புகள் மற்றும் போக்குவரத்து தீவு திட்டுகள் பராமரிக்கப்படும். மேலும் மீதமுள்ள சாலை மைய தடுப்புகள் மற்றும் போக்குவரத்து தீவுத்திடல் ஆர்வம் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலம் தத்தெடுப்பு முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் 63 எண்ணிக்கையில் சமுதாய நலக்கூடங்கள் பொது மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சமுதாய நலக்கூடங்களைச் சிறந்த முறையில் பராமரிக்க நடப்பு நிதி ஆண்டில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நிர்பயா திட்ட நிதிகளை ஒருங்கிணைத்து சென்னை மாநகரில் 366 இடங்களில் உள்ள பொதுக் கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடங்களில் ரூ.36.34 கோடி மதிப்பீட்டில் 918 எண்ணிக்கையிலான கழிப்பிட இருக்கைகளும் மற்றும் 671 எண்ணிக்கையிலான சிறுநீர் கழிப்பான்களும் மறு சீரமைக்கப்படும்.
2022 – 23 ஆம் நிதியாண்டில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கிய நபர்களைக் கொண்டு மண்டலம் 4 மற்றும் 6ல் கீழ்க்கண்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணி, சாலையோரங்களில் மரம் நடும் பணி, பூங்காக்களில் மரம் நடும் பணி மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான அனைத்து நிலம் மற்றும் உடைமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு அதன் விபரங்களை கணினிமயமாக்கி, புவியியல் தகவல் அமைப்பு குறியீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சியின் அனைத்து நிலங்கள் மற்றும் உடைமைகளை நில அளவை எல்லை வரையறை, புவியியல் தகவல் குறியீடு செய்து அனைத்து விபரங்களும் தொகுக்கப்பட்ட மென்பொருள் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரிப்பன் மாளிகை நிறம்மாறும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இப்பணியை மேற்கொள்ள 1.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி 10 மண்டலங்களான 1,2,3,4,6,7,11,12,14 மற்றும் 15ல் தெரு விளக்கு பராமரிப்பு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் எளிமையான முறையில் சொத்து வரியைச் செலுத்துவதற்குப் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்த நிதியாண்டில் கியூஆர் குறியீட்டினை செயல்படுத்தி பொதுமக்கள் சொத்து வரி செலுத்துவதற்கு வழிவகை செய்யப்படும்.
ரிப்பன் கட்டிடம் மற்றும் அனைத்து வட்டார அலுவலகங்களிலும் தானியங்கி கருவி மூலம் சொத்து வரி செலுத்துவதற்கு வழிவகை செய்யப்படும்.
சென்னை மாநகராட்சியின் பணிகள் வாட்ஸ் அப் கணக்கு வாயிலாக ஏற்கனவே பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், பதிவிறக்கம் செய்தல், சொத்து வரி நிலை அறிந்து பணம் செலுத்துதல், தொழில் வரி செலுத்துதல் மற்றும் கட்டடம் சமர்ப்பிப்பதற்கான சேவைகள் நடைமுறையில் உள்ளது. மேலும் பொது மக்களின் நலனுக்காக தற்போது உள்ள சேவைகளுடன் கூடுதலாகப் பின்வரும் சேவைகள் வழங்கப்படும். வர்த்தக உரிமம் புதுப்பித்தல், நிறுவன வரி செலுத்துதல், கட்டட திட்ட விண்ணப்பத்தின் நிலையை நிகழ்நிலை மூலம் அறிதல் ஆகிய சேவைகள் வழங்கப்படும்.
டிஜிலாக்கர் வழியாக வர்த்தக உரிமங்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
சென்னை மாநகராட்சியில் மின் அலுவல் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும். இதன் வாயிலாக வரும் காலங்களில் பொது மக்களுக்கான சேவைகள் கால தாமதமின்றி விரைவாகச் செய்து முடிக்கப்படும்.
சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர்களும் மக்களின் குறைகளை உரிய நேரத்தில் நிவர்த்தி செய்யவும் அவர்களின் தினசரி வருகையைக் குறிக்கவும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க அதிகாரிகளுக்குத் தெரிவு பலகை ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் வாயிலாக ஒரு புதிய பணியாளர் செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். இச்செயலி வாயிலாக பொது மக்களுக்கான சேவைகள் குறித்த காலத்தில் முடிக்கப்படுகின்றனவா என்பதைத் திறமையான முறையில் கண்காணிக்க இயலும்.
கடந்த 7 ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றம் செயல்படாத காரணத்தினால் மாண்புமிகு மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதியிலிருந்து எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இத்திட்டம் தொடர்ந்து நடைபெற ஏதுவாக நடப்பு நிதியாண்டில் 2 கோடி ரூபாய் மாண்புமிகு மேயர் சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காகவும், ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களுக்கு 35 லட்சம் வீதம் 200 வார்டுகளுக்கு மொத்தம் 70 கோடி ரூபாய் மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சியின் நடைமுறை பணிகள் மற்றும் நிர்வாக விபரங்கள் குறித்து உரிய துறையின் அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
**-பிரியா**