தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில், சுனாமி போன்று கொரோனா பரவி வருகிறது என சிறப்பு அதிகாரி சித்திக் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் தொற்று அதிகமுள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, பரவலை கட்டுப்படுத்துவதற்காக தலைமை செயலாளர் அரசு அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று(ஏப்ரல் 29) காலை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள எட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் மூலம், மறுஉத்தரவு வரும் வரை, மே மாதத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 வரை இரவுநேர ஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும்.
தமிழகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி நடத்தி கொள்ளலாம்.
முழு ஊரடங்கு அன்று சென்னையில் குறைந்த அளவில் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே அறிவித்தது போல் இறைச்சி கடைகள், மீன் சந்தைகள் இயங்குவதற்கான தடை தொடரும்.
ஞாயிறு முழு ஊரடங்கின் போது ஏற்கனவே அறிவித்த நேரங்களில், உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரயில், விமான நிலையங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிடும் ஆட்டோ, கால் டாக்சி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.
மே 2 வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழுஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த, ஊரடங்குடன் கூடிய கட்டுப்பாடுகள் தற்போது நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
.�,