லடாக் பகுதியில் அமைந்துள்ள இந்திய -சீன எல்லையில் நடந்த மோதலில் ஜூன் 15 ஆம் தேதி 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று (ஜூன் 26) நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த வீரர்களுக்கு நீதி கேட்டு, ‘ஸ்பீக் அப் ஃபார் ஜவான்ஸ்’ என்ற வலைத்தள பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இதில் காங்கிரஸின் தலைவர் முதல் கடைக்கோடி நிர்வாகிகள், தொண்டர்கள் வரை வீடியோ மூலம் ராணுவ வீரர்களுக்கு நீதி கேட்டு பேசியிருக்கிறார்கள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 26) வெளியிட்டுள்ள வீடியோவில், “பிரதமர் நரேந்திர மோடி, சீனா எந்த இந்திய பிரதேசத்தையும் ஆக்கிரமித்துள்ளதா என்பது குறித்து நாட்டிற்கு உண்மையை சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
“இந்திய தேசத்தின் ஒரு அங்குலம் கூட யாராலும் பறிக்கப்படவில்லை என்றும், ஊடுருவல் எதுவும் இல்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார். கிழக்கு லடாக்கில் மூன்று இடங்களில் சீனா இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரதமரின் பின்னால் முழு நாடும் ஒன்றாக நிற்கிறது. பிரதமர் ஜி, பேசுங்கள், பயப்பட வேண்டாம். நீங்கள் நாட்டிற்கு உண்மையைச் சொல்ல வேண்டியிருக்கும். ஆம், சீனா நம் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது, அவர்களுக்கு எதிராக நாங்கள் செயல்படப் போகிறோம் என்று சொல்வதற்கு பயப்பட வேண்டாம். முழு நாடும் உங்களுடன் உள்ளது” என்றார்.
இதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ சீனாவுடனான நமது எல்லைகளை பாதுகாப்பதற்கான தனது பொறுப்பை மத்திய அரசால் கைவிட முடியாது” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும், “பிரதமர் கூறியது போல், எந்த இந்திய பிரதேசத்தையும் சீனா கைப்பற்றாதபோது நம் நாட்டின் வீரர்கள் ஏன் வீர மரணத்தைத் தழுவினார்கள்? லடாக்கில் சீனா நமது நிலத்தை கைப்பற்றவில்லையா என்று நாடு அறிய விரும்புகிறது. இந்திய எல்லைக்குள் எந்த ஊடுருவலும் இல்லை என்று பிரதமர் கூறுகையில், செயற்கைக்கோள் வழியாக பார்த்த நிபுணர்கள் நமது பிராந்தியத்தில் சீன துருப்புக்கள் இருப்பதை ஊடுருவுவதை உறுதிப்படுத்துகிறார்கள். மோடி அரசாங்கம் லடாக்கில் நமது நிலத்தை சீனாவிலிருந்து எப்போது, எப்படி திரும்பப் பெறும்? எல்லையில் உள்ள நிலைமை குறித்து பிரதமர் நாட்டை நம்பிக்கையுடன் அழைத்துச் செல்வாரா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
**-வேந்தன்**
�,