கோவில்பட்டியில் தேர்தல் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும்,மிரட்டியதற்காகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ, கடம்பூரிலிருந்து கோவில்பட்டிக்கு தங்கள் நிர்வாகிகளுடன் காரில் சென்றார். அப்போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து, எஸ்.ஐ.முருகன் மற்றும் போலீசார் கொண்ட பறக்கும் படை குழுவினர் அமைச்சரின் காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
இதுபோன்று கடந்த வாரமும் தன்னுடைய காரை அதே குழுவினர் சோதனையிட்டனர். இரண்டு முறை தன்னுடைய காரை சோதனையிட்டதால், ஆத்திரமடைந்த அமைச்சர் இதுகுறித்து பறக்கும் படை அலுவலரிடம் கேட்டபோது, தங்கள் கடமையை செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அமைச்சர் தேர்தல் அலுவலர்களை மிரட்டியதாகவும், ஒருமையில் பேசியதாகவும் நாலாட்டின்புதூர் போலீசில் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவசர அவசரமாக பறக்கும்படை அலுவலர் மாரிமுத்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு மாற்றப்பட்டிருந்தார்.
கடமையை செய்ததற்காக பணியிட மாற்றமா என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
இதையடுத்து, பறக்கும் படை அலுவலர் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 மற்றும் மிரட்டல் விடுத்ததற்காக பிரிவு 506/1 என இரண்டு பிரிவுகளின் கீழ் நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளாத்திகுளம் தொகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து, மீண்டும் கோவில்பட்டி தொகுதிக்கு மாற்றப்பட்டார்.
**வினிதா**
�,