முனைவர் சகுப்பன்
கோவிட் 19 எனும் நச்சுயிரின் பாதிப்பானது உலகின் அனைத்து நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திவிட்டது, குறிப்பாக இந்தியாவிலும் இந்த தொற்றுநோயின் பாதிப்பினால் அடுத்தடுத்து நெருங்கிய நண்பர்கள் / குடும்ப உறவினர்கள் போன்றவர்களின் உயிரிழப்பு பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியைப் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து கேட்டிருப்பார்கள். அதோடு அவ்வாறு இழந்து தவித்திடுபவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்குக்கூட நேரில் செல்லமுடியாதநிலையில் நம்மில் பெரும்பாலானோர் தொலைபேசியின் வாயிலாக மட்டுமே தொடர்பு கொண்டு ஆறுதல் கூறுகின்ற அவலச் சூழலுக்கு ஆளாகிவிட்டோம். மேலும், இந்த நச்சுயிரானது சூறாவளி போல வந்து, அதன் பாதையில் இருந்த ஒருசிலரின் உயிரைப் பறித்து பூமியிலிருந்தே துடைத்து எறிந்துவிட்டது. அதோடு அவ்வாறான உயிரிழப்பால் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கையையே சிதைத்துவிட்டது. அதன் பிறகு நடைப்பிணங்களாக அதற்கான சாட்சியாக மட்டுமே நம்மில் பலர் வாழ்ந்து வருகின்ற மோசமான சூழலுக்கு ஆளாக்கி விட்டது. மிக முக்கியமாக இந்த கோவிட் -19 எனும் நச்சுயிர் தாக்கத்தினாலும் அதனால் உருவான பயத்தினாலும் நம்முடைய மக்களின் பெரும்பாலானவர்களின் வாழ்வு மிக மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது.
மேலும் இவ்வாறான நச்சுயிர் தாக்கத்தினால் சில மருந்துகளால் தீர்வுசெய்ய முடியாத அரிய நோய்கள் வந்து இறந்துவிடும் நிலை வந்துவிடுமோ என்ற பயம் பலரை மனச்சோர்வடையுமாறு செய்துவிட்டது. அதைவிட இதன் தாக்கத்தினால் தனிநபர்களின் உயிரிழப்பு மட்டுமல்லாது மாணவச்செல்வங்கள் கல்வி கற்பதற்காக நேரடி வகுப்பில் கலந்து கொள்ள முடியாமல் இணையத்தின் வாயிலான மெய்நிகர் வகுப்பில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் எனும் மாற்றத்தினால் ஆசிரியர்கள் , வகுப்புத் தோழர்கள் ஆகியோர்களுடனான தொடர்பை முற்றிலும் இழந்தனர்.
அதுமட்டுமல்லாது அனைத்து தொழில் வல்லுநர்களும் தத்தமது வீட்டிலிருந்தவாறே தம்முடைய பணியைச் செய்தனர். அதனால் நண்பர்களின் தொடர்பையும் சமூக தொடர்களையும் அறவே இழந்தனர். மேலும் பழைய தலைமுறையினர் தனிமையை மறப்பதற்காக தங்களுடைய நண்பர்களுடன் நேரடியாகச் சந்தித்து உரையாட முடியாமல் தொலைபேசிகளில் ஒட்டிக்கொண்டனர்.
மிக முக்கியமாக உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் பெரும்பாலானவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் இணையவழியிலான வாட்ஸ்அப், ஜூம் போன்ற பயன்பாடுகளின் வாயிலாக மட்டுமே சந்தித்தனர். மேலும், இவ்வாறான பயன்பாடுகளின் உதவியுடனான காணொலி காட்சி தொடர்பு வாயிலாக மட்டுமே உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தங்களுடைய மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பரிமாறிக் கொண்டனர். ஆனாலும்கூட, இந்த வசதி வாய்ப்புகளை தொழில்நுட்ப ஆர்வலர்களும், வசதி வாய்ப்புள்ளவர்களும் மட்டுமே அனுபவித்தனர். ஏழை எளியவர்கள் இவ்வாறான வசதி வாய்ப்புகளைப் பற்றிய செய்திகளை மட்டுமே அறிந்து கொண்டனர். நடைமுறையில் அவற்றை பெற முடியாத அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்
கோவிட் -19 ஆனது மனிதர்களை இயந்திர மனிதர்களாக மாற்றுவதில் பெரும் வெற்றி பெற்றுவிட்டது, அதாவது மக்கள் அனைவரையும் தனிமையில் வாழுமாறு தண்டித்தது. அதே நேரத்தில் மனித தொடர்பின் நன்மையை அனைவரும் உணர்ந்துகொள்ளுமாறு கற்றுக்கொடுத்தது.
இந்த கோவிட் -19 நச்சுயிரின் தாக்கத்தினால் குழந்தைகள் மட்டுமே மிகப்பெரிய அளவில் உளவியல் அழுத்தங்களை எதிர்கொண்டு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய முழு அனுபவமும் அவர்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. இருந்தபோதிலும் அவர்களில் பெரும்பாலானோர் இதனுடைய அச்சத்துக்கு அடி பணியவில்லை என்பது ஓர் அதிசயமாகும். ஆனாலும் இந்த நச்சுயிர் பாதிப்பின் வடுக்கள் கட்டாயம் அவர்களிடம் இருக்கக்கூடும்.
இந்த பாதிப்பானது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மக்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை மிக மோசமாக ஆக்கிவிட்டது. அவர்களுள் கீழ்மட்ட நிலையினரின் குழந்தைகள் இணையத்தின் வாயிலான வகுப்புகளில்கூட கலந்து கொள்ள இயலாத சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தத் தொற்றுநோய் தாக்கியதால் அவர்களின் பெற்றோர்களை வேலையில்லாத சூழலுக்குத் துரத்திவிட்டது. அதனால் அவர்கள், மேல்நிலையிலுள்ள வசதியானவர்களைப் போன்றில்லாமல், தங்களுடைய வாழ்வின் நிச்சயமற்ற தன்மையையும் தனிமையையும் எதிர்கொண்டனர்.
துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளுக்காகவே போராடுகின்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதாவது, பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பே இல்லாத சூழலை இந்த நச்சுயிர் உருவாக்கிவிட்டது என்பதே உண்மையான களநிலவரமாகும்.
பொதுமுடக்க அறிவிப்பினால் நகர்ப்புறத்தில் வாழ்கின்ற அன்றாடம் கூலி வேலை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற அவலநிலையிலுள்ள அத்துகூலிகளான அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் அடிப்படைத் தேவையான உணவுப்பொருட்கள் நகர்ப்புறத்தில் கிடைக்காததால் தத்தமது கிராமத்துக்குச் சென்றால் அரை வயிறு, கால் வயிறு உண்பதற்கான உணவு ஏதாவது கிடைக்காதா என்ற நப்பாசையினால் கிராமத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கியபோது பொதுமக்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுகின்ற தொடர்வண்டி, பேருந்து ஆகிய எதுவுமே பயன்பாட்டிலிருந்து நிறுத்தம் செய்துவிட்டதால் தங்களுடைய கிராமத்துக்கு நடந்தே சென்று விடுவோம் எனப் புறப்பட்டனர்.
ஆனாலும் வழியில் அவர்களுக்குத் தேவையான உணவு இல்லாமல் பசி பட்டினியுடன் பலர் நடந்து செல்கின்ற பாதையிலே வீழ்ந்து மடிந்தனர். அவ்வாறான சூழலில் தன்னுடைய தாய் இறந்ததுகூட அறியமுடியாத பச்சிளம் குழந்தை, தன்னுடைய வயிற்றுப்பசிக்காக அல்லாடிய அவலநிலை உருவானது.
ஆராய்ச்சியாளர்கள் இந்த கோவிட் -19 நச்சுயிரின் தாக்கத்தினால் இளம்சிறார்களின் மன ஆரோக்கியம் மிகவும் மோசமாக பாதித்திருக்கலாம் என்றும் சமூக தொடர்பு இல்லாததன் விளைவாக இளம் வயதினர் மன அழுத்தத்துக்கு ஆளானதாகவும் கூறுகின்றனர். மேலும் குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோர்களிடையே அதிகப்படியான சமூக தனிமைப்படுத்திடும் செயலானது அவர்களின் உடல்நலனையும் நல்வாழ்வையும் பாதிக்கக்கூடும் எனக் கூறுகின்றனர். குறிப்பாக, இந்தியாவைப் போல முன்பதிவு செய்யப்படாத சமூக தொடர்புகளுடன் கூடிய சமூகத்தில் இதுவே உண்மை நிலவரமாகும் .
ஒரு மருத்துவர் இந்த நச்சுயிரின் பாதிப்பானது அவரது தொழில் வாழ்க்கையை பாதித்தது மட்டுமல்லாமல், அவர் இப்போது இணையத்தின் வாயிலாக மட்டுமே நோயாளிகளுக்கான ஆலோசனைகளை வழங்குவதாக ஒப்புக்கொண்டார்
‘Nature’எனும் அறிவியல் ஆய்வு இதழின் இந்தத் தொற்றுநோய் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வயதானவர்களைவிட இளைஞர்களின் சமூக தொடர்புகளின் தேவை தற்போது வலுவாக இருப்பதால் அவர்கள் , அதிக அளவில் உளவியல் ரீதியான துயரங்களால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று காட்டுவதாகவும், இவ்வாறானவர்கள் கவலை, மன அழுத்தம், குறிப்பாக தற்கொலை எண்ணங்கள் போன்ற மனநலப் பிரச்சினைகளுடனான ஆபத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது..
சமுதாய இணையதளமான ட்விட்டரில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை மில்லியன் கணக்கான ட்வீட்களின் உரையாடல்களில் பயன்படுத்தப்படும் பிரபலமான ஹேஷ்டேக்குகளான #GoodHealth , #MentalHealthMatters ஆகியவற்றின் வாயிலாக இந்த கோவிட் -19இன் பாதிப்பு பொதுமக்களின் மனதில் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளன என்பதை அறிந்துகொள்ளலாம்
முடிவாக அறிவியல் ஆய்வின் மூலம் இந்த கோவிட் -19ஐத் தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளும் தடுப்பு மருந்துகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களானவை அவ்வாறான அறிவியல் ஆராய்ச்சியின் பயனால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளைக் கொண்டும் வழிமுறைகளைப் பின்பற்றியும் இந்த கோவிட்-19 நச்சுயிரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, பாதுகாப்பது மட்டுமல்லாமல் மற்ற பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகத் தடுப்பூசிகள், பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை மனிதநேயத்துடன் செயல்படுத்துதன் வாயிலாக இந்த நச்சுயிர் மேலும் பரவாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இருந்தபோதிலும் பிளேக், டெங்கு, சிக்குன்குனியா, பெரியம்மை, மலேரியா போன்ற நச்சுயிர்களின் பாதிப்பினை ஏற்றுக்கொண்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் வாயிலாக அவற்றுக்கான தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொண்டு அவற்றுடன் வாழக் கற்றுக்கொண்டோம்.
அதேபோன்று இந்த கோவிட் -19 எனும் நச்சுயிர் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் உருவாகக்கூடும் என இதைத் தடுப்பதற்காக தடுப்பூசி போடுவது, நெரிசலான இடங்களில் ஒன்று சேருவதைத் தவிர்ப்பது, பொதுமக்கள் அதிக அளவில் கூடுகின்ற குழுவான தொடர்புகளைத் தவிர்ப்பது, எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிவதோடு ஒருவருக்கொருவர் மூன்றடி இடைவெளி கடைப்பிடிப்பது, வெளியில் சென்று வீடு திரும்பினால் சோப்புடன் கைகால்களைக் கழுவியபின் உள்நுழைவது, கைகளால் கண், மூக்கு, வாய் ஆகிய உடலுறுப்புகளை அடிக்கடி தொடுவதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த கோவிட் -19 நச்சுயிரின் பாதிப்புகளைத் தடுப்பது நமது பொறுப்பாகும். இந்த எளிய சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றினால், நம்முடைய வாழ்வின் வழக்கமான நிலையை மீட்டெடுக்க முடியும்.
பிரிட்டிஷ் எழுத்தாளரான சோமர்செட் மாக்ஹாம் என்பவர், “பயத்தில் வாழும் மக்கள் வாழ்வதில்லை. அவர்கள் வெறுமனே பொம்மையைப் போன்று இருக்கிறார்கள்” எனக் கூறியதைப் பொய்யாக்கி இந்த கோவிட் -19 எனும் நச்சுயிரினால் நமக்கு ஏற்பட்டுள்ள பயத்தை அறவே விரட்டிவிட்டு மீண்டும் நம்பிக்கையுடன் நம்முடைய வாழ்க்கையை வாழத் தொடங்கிடுவோம்.
**கட்டுரையாளர்: **
**முனைவர் சகுப்பன்**. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள பொ.மெய்யூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பயன்படுத்தப்படும் நிர்வாக கணக்கியல் முறை (Management Accounting Practice in Tamil Nadu Co-operative Sugar Mills) பற்றிய முனைவர் பட்ட ஆய்வைப் செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
1996 முதல் 2018 வரை பல்வேறு சர்க்கரை அலைகளில் கணக்கராகவும் நிறுமச் செயலராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது www.vikupficwa.wordpress.com என்ற இணையதள முகவரியில் எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்களைத் தினமும் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டு வருகிறார். தொடர்புக்கு: kuppansarkarai641@gmail.com
.
�,”