முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்துள்ளது. வேலுமணி உள்ளிட்ட 17பேர் மீது இவ்வழக்கு பதியப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான, தொடர்பான 52 இடங்களில் இன்று(ஆகஸ்டு 10) லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரான வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சிகளில் தன் பதவி காலத்தில் டெண்டர்களை முறைகேடாக வழங்கி அதன் மூலம் முறைகேடு செய்திருக்கிறார் என்று இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. 120 -பி, 420, 409 செக்ஷனில் 13 (2) r/w 13 (i) (c) மற்றும் 13 (1) (d) r/w 109 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்பி, அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் ஆகியோர் வேலுமணி மீது ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியிலேயே புகார்களைக் கொடுத்தார்கள். ஆளுநர் மாளிகைக்கு சென்று திமுக புகார் கொடுத்தது. அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கில் வேலுமணி மீதான புகார்களுக்கு முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இப்போது அதே புகார்களின்
படிதான் இப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
எஸ்பி வேலுமணி தவிர மீதமுள்ள அவரது சகோதரர் அன்பரசன், கேசிபி நிறுவனப் பொறியாளர்கள், கே.சந்திரபிரகாஷ், ஆர்.சந்திரசேகர், ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, தி ஏஸ்-டெக் மெஷினரி இந்தியா பிரைவேட் லிமிடெட், கான்ஸ்ட்ரோனிக்ஸ் இன்ஃப்ரா லிமிடெட், கான்ஸ்ட்ரோமால் குட் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலயம் ஃபவுண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், வைதுர்யா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலம் கோல்ட் & டைமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏஆர் இஎஸ் பிஇ இன்ப்ரா பிரைவேட் லிமிடெட், சிஆர் கட்டுமானத்தின் கு.ராஜன் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் அறப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராமன், “அறப்போர் இயக்கம் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுத்த ஊழல் புகாரை அடுத்து வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2 வருடங்களில் ஆதரவு தந்து துணை நின்ற அனைவருக்கும் நன்றி. அறப்போர் தொடரும்”என்று தெரிவித்திருக்கிறார்.
**-வேந்தன்**
�,