மணல் குவாரிகள் – துரைமுருகன் அறிவிப்பின் பின்னணி!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் விரைவில் மணல் குவாரிகள் திறக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்திருப்பது, மாநிலம் முழுவதும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

முந்தைய ஆட்சியின்போது பல பொதுநலன் வழக்குகளை முன்னிட்டு, மணல் குவாரிகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டது. பின்னர், 2018ஆம் ஆண்டு மார்ச்சில் மணல் குவாரிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அப்போது தனியார் மணல் குவாரிகள் மட்டும் செயல்படக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.

அரசு குவாரிகளைவிட பல மடங்கு விலைவைத்து மணலை தனியார் விற்பதாக புகார் எழுந்ததே அதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சியின்போது மணல் வர்த்தகத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த ஆறுமுகசாமிக்கு அது வசதியாக அமைந்தது என்பதே உண்மையான பின்னணி என்றும் பல தரப்பினரும் குற்றம்சாட்டினர்.

அரசே மணலை விற்பனை செய்வதற்காக அருண் தம்புராஜ் என்கிற ஐஏஎஸ் அதிகாரியை திட்ட இயக்குநராக நியமித்து, பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் பல மாவட்டங்களில் வீடு கட்டுபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான மணல் கிடைப்பதில்லை என்றும் மணல் தரகர்கள், முன்னாள் ஒப்பந்தகாரர்கள் போன்றவர்களுக்கு மட்டும் எளிதாகக் கிடைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடரப்பட்டு, அப்போதைய நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, அரசே மணலை வெளிப்படையாக விற்பது சரிதான்; ஆனால் மக்களுக்கு மணல் கிடைக்கும்படி செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆட்சி மாறிய பின்னர் இதில் நிலைமை மாறவேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்பினர் எதிர்பார்த்தனர்.

இதற்கிடையே, தனியார் நிலத்தில் மணல் குவாரி தொடர்பான பேச்சும் எழுந்தது.

மணல் கிடைக்காத நிலையில் எம் சாண்டின் பயன்பாடு அதிகரித்தது.

இந்த சூழலில் மணல் எடுப்பதில் புதிய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டை முடிவுசெய்ய வேண்டும் என அதிகாரமட்டத்தில் ஒத்த கருத்து உருவாகவில்லை.

இது தொடர்பான கோப்புக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் போன்ற மட்டத்தில் பிரேக் போட்டு நிறுத்திவைக்கப்பட்டது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உயர் அதிகாரி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், துறையின் அமைச்சர் துரைமுருகன் திடீரென இப்படியொரு தகவலை வெளியிட்டதன் மூலம் அரசின் முடிவு எப்போதும் வெளியிடப்படலாம் என்கின்றன தலைமைச்செயலக வட்டாரங்கள்.

**- வணங்காமுடி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share