சிவகாசியில் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஹவுசிங்போர்டு பகுதியில் வசிக்கும் கார்த்திக், குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் விருதுநகர் மாவட்டச் செய்தியாளராக பணியாற்றிவருகிறார். நேற்று வெளியான ரிப்போர்ட்டர் இதழில் உள்ளூர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவுவதாக ‘ராஜேந்திர பாலாஜியை வீழ்த்துவாரா ராஜவர்மன்? விருதுநகர் அதிமுகவில் உச்சகட்ட மோதல்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் செய்தியாளர் கார்த்திக் நேற்றிரவு (மார்ச் 3) சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு சென்ற மர்ம நபர்கள் 7 பேர் ஹோட்டல் வாசலில் வைத்து கார்த்திக்கை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் அவருக்கு தலை, முகம், வாய் என பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் கிடந்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அமைச்சர் -எம்.எல்.ஏ மோதல் தொடர்பாக கட்டுரை வெளியிட்டதற்காகவே இந்த தாக்குதல் நடந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், “செய்தியாளர் கார்த்தி மீதான இந்த கொடூர கொலைவெறி தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.பத்திரிகையாளர்கள் சிந்தும் ரத்தம் தமிழகத்திற்கு கேடானது. செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர் கார்த்தி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது உடனடி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காவல் துறைக்கும் தமிழக அரசுக்கும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் செயல்கள் அதிகரித்து வரும் அவல நிலையை கவனத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பத்திரிகையாளர் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ஆவின் மேலாளர் (நிர்வாகம்) பதவிக்கு, அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியின் மனைவியும், மற்றொரு மேலாளர் பதவிக்கு விருதுநகர் அ.தி.மு.க. பிரமுகர் மகனும் நியமிக்கப்பட்டது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளையும், அரசியல் மோதல்களையும், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் வெளியிட்டுள்ள நிலையில், அதன் செய்தியாளர் மீது இந்த கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளது” என்று குறிப்பிட்டார்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும், அதற்குக் காரணமானவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், வழக்கமாக நடவடிக்கை எடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, பிறகு குளிர்பதனப் பெட்டியில் அடைத்து வைக்கும் தந்திரத்தை இந்த நிகழ்விலாவது கைவிட வேண்டும் எனவும் முதல்வருக்கு வலியுறுத்தியுள்ள ஸ்டாலின்,
“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் ஏற்கனவே மதரீதியான வன்முறை – வெறுப்பு வார்த்தைகளை மேடைகள் தோறும் வெளிப்படுத்தி வருவதுடன், தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்துவேன் என தடித்த வார்த்தைகளையும் எவ்வித கூச்சமும் அச்சமும் இன்றிப் பயன்படுத்தி வருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, “ஊடக வெளிச்சம் எனும் மலினமான அரசியல் விளம்பரத்திற்காக, முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் முதலமைச்சர் போலச் செயல்படும் அமைச்சரின் சொற்கள் பலவும் நச்சுத் தன்மை மிக்கவையாக உள்ளன. ‘அம்மா வழி ஆட்சி’என்பவர்களின் பேச்சுகளும், அதைத் தொடர்ந்து திட்டமிட்டு நடத்தும் வன்முறைகளும் பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், செய்தியாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், அமைதிக்குக் கேடு செய்து, குலைக்கின்ற வகையிலேயே தொடர்கின்றன. எப்போது யாரைப்பற்றிப் பேசினாலும் அடிப்பேன் , உதைப்பேன், நாக்கை அறுப்பேன், தூக்கிப்போட்டு மிதிப்பேன் என்று, அமைச்சராக இருப்பதாலேயே ஆணவத்தினால், அராஜகமாகக் கொக்கரித்து வரும் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் அமைதி காப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் கார்த்திக்குக்கு உரிய தரமான சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்கப்படவேண்டும்” என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**
�,