அமித்ஷா பிஏக்கு போன் பண்ணி கலவரம் செய்வேன்: பாஜகவினர் கைது!

Published On:

| By Balaji

போதையில் இருந்த இரண்டு பாஜக அலுவலக பொறுப்பாளர்கள் சிக்கன் ஃப்ரைடு ரைஸுக்கு காசு தர மறுத்து, அமித் ஷாவின் பிஏவை அழைத்து கலவரம் செய்வோம் என்று மிரட்டியதாக இன்று (ஜனவரி 13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை (ஜனவரி 11) இரவு சென்னை திருவல்லிக்கேணி முத்தையா தெருவில் ஓர் உணவகத்துக்கு சிலர் போதையில் சென்றனர். அங்கே அவர்கள் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் கடையின் உரிமையாளர் அவர்களிடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் தர முடியாது என்றும், நாங்க பிஜேபிக்காரர்கள் என்றும் மறுத்திருக்கிறார்கள்.

கடை உரிமையாளர் சில நிமிடங்களில் போலீஸுக்கு போன் போடவும், பேட்ரல் போலீஸ் வாகனம் கடை வாசலுக்கு வந்தது. அப்போதும் அவர்கள் இருவரும் போதையில் அலம்பல் செய்துகொண்டிருந்தனர்.

அதில் ஒருவர், “ நான் பிஜேபி திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் ” என்று போலீஸிடம் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இன்னொருவர், “மதக் கலவரம் ஆயிடும், நாளைக்கு கடை இருக்காது. நான் பிஜேபிஆளு. அவர் இந்துமுன்னணி ஆளு நான் கன்ட்ரோல் பண்ணி வச்சிருக்கேன் அவரை. அவன் என்ன நக்கலா பேசுறான்…முஸ்லீமுங்குறான். அமித் ஷா பி ஏக்கு போன் அடிச்சுருவேன். கலவரம் ஆயிடும். ஆயிரம் பேர் ரெடியா இருக்குறாங்கோ” என்று போதையில் போலீஸ் முன்னிலையிலும் அவர் மிரட்ட, போலீஸோ, ‘சார் போங்க போங்க….பேசிக்கிட்டே இருந்தா எப்படி?’என்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ சமூக தளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 13) காலை பாஸ்கர், புருஷோத்தமன் என்ற அவ்விருவரையும் சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share