அலங்கார ஊர்தி நிராகரிப்பு விவகாரத்தில் திமுக அரசு அரசியல் ஆதாயம் தேடுவதாக கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனிடையே மாநிலத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், “ தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றன” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “பாஜக ஆளும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் அலங்கார ஊர்திக்கு விண்ணப்பித்து இருந்தாலும் 12 ஊர்திகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் உண்மையை மறைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியின் ஒரு பகுதியாக திமுக அரசின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
எனினும் சுதந்திரப் போராட்ட வீரர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் எந்தவொரு முயற்சியையும் வரவேற்கிறோம். இந்த அலங்கார ஊர்தியைக் குக்கிராமங்கள் வரை கொண்டு செல்ல வேண்டும். அனைத்து மாவட்டத்திற்கு ஒரு அலங்கார ஊர்தியை, தமிழக அரசு ஏற்பாடு செய்து தமிழகம் முழுவதும் வலம் வரச் செய்ய வேண்டும்.
வ.உ. சிதம்பரம் பிள்ளை, வேலுநாச்சியார் போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்களின் வீர வரலாற்றையும், அவர்களின் தேசியம், தெய்வீகம் தாங்கிய கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க முதல்வர் எடுத்துள்ள முயற்சிகளை வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**
�,