அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இருபது இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாட்டில் நேற்று (மார்ச் 5) நள்ளிரவு பாஜக சார்பில் பொதுச் செயலாளர் சி.டி. ரவி, எல். முருகன் ஆகியோரும் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த உடன்படிக்கையில், “ 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க.-பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டில் தேர்தலை சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 6-ந்தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் நேற்று வெளியிட்ட [அதிமுகவிடம் பாஜக கேட்கும் முதன்மைப் பத்து](https://minnambalam.com/politics/2021/03/05/52/bjp-asking-prime-ten-seats-for-vip-candidates) என்ற செய்தியில்,
“பாஜக 25 இல் இருந்து 30 தொகுதிகள் வரை எதிர்பார்க்க, அதிமுகவோ 18முதல் 21 தொகுதிகளில்தான் விடாப் பிடியாக நின்று கொண்டிருக்கிறது. சில கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் பாஜக சார்பில் ஒரு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ’தொகுதி எண்ணிக்கையில் அதிமுக சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொண்டால் பாஜகவின் முக்கியமான கோரிக்கையை அதிமுக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிமுக கொடுக்கும் தொகுதிகளில் பத்து தொகுதிகள் பாஜக கேட்பவையாக இருக்க வேண்டும். ஏனெனில் பாஜகவில் முதன்மையான பத்து பேர்களுக்கு அவர்களின் தொகுதிகளை அதிமுக கொடுக்க வேண்டும்” என்று ஒரு பட்டியலைக் கொடுத்தது பாஜக. இந்த அடிப்படையிலே இருபது தொகுதிகளுக்கு சம்மதித்தோம் என்கிறார்கள் பாஜக தரப்பினர்.
இப்போது இரண்டாம் பத்து வேட்பாளர்களை தயார் செய்யும் பணியில் தீவிரமாகியுள்ளது பாஜக.
மேலும் இதன் மூலம் பாமகவை விட ஒரு தொகுதி அதிகமாக கேட்டுக் கொண்டிருந்த தேமுதிகவுக்கும் அதிமுக தலைமை செக் வைத்துள்ளது. “பாஜகவே இருபது தொகுதிகளுக்கு சம்மதித்துவிட்டது. ஏற்கனவே சொன்னபடி 12+1 இடங்களுக்கு வேண்டுமானால் வாருங்கள். இல்லையேல்….” என்று தேமுதிகவுக்கும் செய்தி அனுப்பிவிட்டது அதிமுக.
**-வேந்தன்**�,