zஇலங்கையிலும் பிஜேபி: தீவிரமாகும் முயற்சிகள்!

Published On:

| By Balaji

இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும் நோக்கம் இலங்கையில் உள்ள இந்துத்துவவாதிகளுக்கு உண்டு. நான் இதை உறுதி செய்கிறேன் என்று இலங்கையின் மூத்த தமிழ் முன்னோடிகளில் ஒருவரும், காந்தளம் பதிப்பகத்தை நடத்தி வருபவருமான மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழ்நாட்டில் விவாதப் பொருளாகியிருக்கின்றன.

“இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயரை இலங்கையில் பெயராக்கிக் கட்சி தொடங்குவது புதிய செய்தி அல்ல. இந்தியாவின் விடுதலை இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸின் வெற்றிகரமான செயலைப் பார்த்துக் கொழும்பில் சிங்களவரும் தமிழரும் இணைந்து உருவாக்கியது இலங்கை தேசிய காங்கிரஸ்.

ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில் மகாத்மா காந்தியடிகளை வரவேற்ற அமைப்பு யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ். நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றை புறக்கணிக்குமாறு அரசியல் நடத்தியதும் அதே காங்கிரஸ்.

ஜவகர்லால் நேரு இலங்கைக்கு வந்து மலையகத் தமிழருக்காக அமைப்பு உருவாக்கியபோது அதே காங்கிரஸ் பெயரை வைத்தார். பெயர் இலங்கை இந்திய காங்கிரஸ். ஜிஜி பொன்னம்பலம் அவர்கள் அதே காங்கிரஸ் பெயரை வைத்து தமிழர்களுக்காகக் கட்சி தொடங்கினார். பெயர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.

ம.பொ.சிவஞானம் தமிழகத்தில் அமைத்த தமிழரசுக் கழகத்தின் பெயரிலேயே தமிழரசுக் கட்சியை உருவாக்கியதாக அக்காலத்திலேயே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மீது குற்றம் சாற்றினார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை இலங்கையில் அமைத்தவர் கொழும்பில் வாழ்ந்த மணவைத்தம்பி.

எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழகத்தில் அண்ணா திமுக அமைப்பைத் தொடங்கிய உடனேயே யாழ்ப்பாணத்தில் இலங்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்தவர் கொட்டடியில் வணிகரான என் அருமை நண்பர் மதிமுகராசா” என்று இலங்கையில் தமிழகத்தின் பல கட்சிகள் இருப்பதைப் பட்டியலிட்ட மறவன்புலவு சச்சிதானந்தன்,

“இலங்கையிலே புலிக்கொடி என்றால் சிங்களவர் நடுங்குவர் என்றும், எல்லாள சோழன் தொடக்கம் பிற்காலச் சோழர் வரை புலிக் கொடியோடு படையெடுத்து அரசுகளைக் கைப்பற்றினர் என்றும் வரலாறுகளை நாங்கள் படித்திருக்கிறோம். நாக நாட்டு அரசர்கள் வைத்திருந்த நாகக் கொடி பின் வந்த சிங்கை அரசர்கள் வைத்திருந்த நந்திக்கொடி இவை யாவும் நமக்குக் கொடிகளாக இருந்தன. எனினும் சோழர்களுடைய புலியைத் தன்னுடைய கொடியில் அமைத்து கொண்டு இயக்கம் நடத்தியவர் திரு.வே.பிரபாகரன்.

சேனநாயக்களுக்கோ ஹண்டி பேரின்பநாயகத்துக்கோ, நடேச ஐயருக்கோ, ஜிஜி பொன்னம்பலத்திற்கோ, செல்வநாயகத்துக்கோ, மணவைதம்பிக்கோ, மதிமுகராசாவுக்கோ, பிரபாகரனுக்கோ இந்தியப் பெயர்களும் சின்னங்களும் இலங்கை அரசியலை முன்னெடுக்கக் காலத்தின் கட்டாயமாக இருந்தமை வரலாறு. மாஸ்கோவில் மழை பெய்தால் இலங்கையில் குடை பிடிப்பார்கள் என்ற நகைச்சுவைக்கு உரியவர்கள் பொதுவுடைமைக் கட்சியினர்.

கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் அறக்கட்டளைகள் பலவற்றை அமைத்தவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அந்த அறக்கட்டளைகளுக்கு இலங்கைப் பெயர்களே வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இலங்கையர் பெயர்களிலேயே விட்டுச்சென்ற சுவடுகள் ஏராளம்.

கொல்கொத்தாவின் இராமகிருஷ்ண மிஷன், ரிஷிகேசத்தின் தெய்விக வாழ்க்கை சங்கம், மராத்தியின் சீரடி சாய்பாபா அமைப்பு, புட்டபர்த்தியின் சத்ய சாய்பாபா அமைப்பு, மேல்மருவத்தூரின் அன்னை பராசக்தி அமைப்பு, கேரளத்தின் ஐயப்ப சேவா சங்கம் என வகை வகையாக இந்திய அமைப்புகளை ஒட்டி இலங்கையில் அமைப்புகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் உள்ள புத்த மரபுகள், சங்கங்கள் யாவும் இந்தியாவை அடியொற்றி அமைந்தன. முதலில் புத்தர் தந்தார். பின்னர் அசோகன் தந்தார். அதற்குப் பின்பு தமிழகத்தில் இருந்து புத்த கோஷர் வந்து விசுத்தி மார்க்கம் கண்டார். தாய்லாந்திலிருந்து சயாம் நிக்காய அமைத்தனர்.

இலங்கை வரலாறு ஒருவகையில் இந்தியப் பண்பாட்டு ஊடுருவலின் வரலாறே. இந்திய – அரசியல் சமூக மருத்துவ அறிவியல் சோதிட மற்றும் வாழ்வியல் கூறுகளையும் விழுமியங்களையும்படி எடுத்து அவற்றை இலங்கைச் சூழலுக்கு ஏற்ப உருவாக்கிய வரலாறே.

இலங்கையில் சிவசேனை அமைந்ததும் இலங்கை பாரதிய ஜனதா கட்சி என அரசியல் கட்சி தொடங்குவதும் 25,000 ஆண்டுகள் தொடர்ச்சியான உலக மனித விழுமியப் படியெடுப்பு வரலாற்றின் பிம்பங்களே” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மறவன்புலவு சச்சிதானந்தன் சிறந்த சைவ அறிஞர். சைவத் திருமறைகளைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடக் காரணமாக இருந்தவர். இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களால் சைவ திருக்கோயில்கள் அழிக்கப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து பலமுறை நமது மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இப்போது இலங்கையிலும் பாஜகவை நிறுவி அதன் மூலமாக இலங்கைத் தமிழர்களின் கோயில்களைப் பாதுகாக்க முடியும் என்று கருதுகிறார் மறவன்புலவு சச்சிதானந்தன்.

இதுகுறித்து தமிழக பாஜகவின் கலை,கலாசாரப் பிரிவு தலைவரான காயத்ரி ரகுராமும் மறவன் புலவு சச்சிதானந்தமும் ஆலோசனை செய்திருக்கிறார்கள். இலங்கையில் பாஜக உருவாக்க வேண்டியதன் தேவையை தமிழக பாஜக மூலம் டெல்லி தலைமை வரை கொண்டு செல்ல காயத்ரி ரகுராம் முயற்சியெடுத்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான விமானப் போக்குவரத்து இயல்பானவுடன் காயத்ரி ரகுராம் இலங்கை சென்றுவர இருக்கிறார் என்கிறார்கள் அவரது தரப்பில்.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share