கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகம் வந்த அமித் ஷா காரைக்கால், விழுப்புரம் ஆகிய ஊர்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பி 28 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தி விட்டு புறப்பட்டார்.
அமித் ஷா சென்னையிலிருந்து புறப்பட்டு 5 நாட்களாகியும் அதிமுக பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் மார்ச் 7ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் அமித்ஷா.
சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக பாஜக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதில் வெற்றிக் கொடிஏந்தி வெல்வோம் தமிழகம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமித்ஷா கன்னியாகுமரி வருகிறார்.
அமித் ஷா மீண்டும் சென்னை வருவதற்குள் அதிமுக கூட்டணியில் பாஜகவின் தொகுதிகள் எத்தனை, என்னென்ன என்பதை முடிவு செய்துவிட வேண்டும் என்று இரு தரப்புமே தீவிரமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் இரு தரப்பிடையே என்ன நடக்கிறது என்று கமலாலயத்தில் காது கொடுத்தோம்.
“முதலில் பாஜக குழுவினர் எல்.முருகன் தலைமையில் சென்று 60 தொகுதிகள் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தார்கள். ஆனால் அவரோ, ‘உங்களுக்கு 16 தொகுதிகள் வைச்சிருக்கோம்’ என்றார். இல்ல எங்களுக்கு 30 தொகுதிகள் வேண்டும் என்று கிஷன் ரெட்டி கோரிக்கை வைத்தார். சரி, தொடர்ந்து பேசுவோம் என்று முதல்வர் பதிலளித்தார்.
அதன்பிறகு முதல்வரை சந்தித்த குழுவினர் அமித் ஷாவை சந்தித்து, எடப்பாடி பழனிசாமி சொன்னதைத் தெரிவித்தனர். அதன் பின் 28 ஆம் தேதி இரவு இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை அமித் ஷா சந்தித்தார். அப்போது 30 தொகுதிகள் வரை பாஜகவுக்கு வேண்டும் என்று தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் கூறியதை அமித் ஷாவும் வலியுறுத்தினார்.
பாஜக 25 இல் இருந்து 30 தொகுதிகள் வரை எதிர்பார்க்க, அதிமுகவோ 18முதல் 21 தொகுதிகளில்தான் விடாப் பிடியாக நின்று கொண்டிருக்கிறது.
சில கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் பாஜக சார்பில் ஒரு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ’தொகுதி எண்ணிக்கையில் அதிமுக சொல்வதை ஏற்றுக் கொண்டால் பாஜகவின் முக்கியமான கோரிக்கையை அதிமுக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிமுக கொடுக்கும் தொகுதிகளில் பத்து தொகுதிகள் பாஜக கேட்பவையாக இருக்க வேண்டும். ஏனெனில் பாஜகவில் முதன்மையான பத்து பேர்களுக்கு அவர்களின் தொகுதிகளை அதிமுக கொடுக்க வேண்டும்.
பாஜக தலைவர் எல்., முருகன், ஹெச்.ராஜா, தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன், பொதுச் செயலாளர்கள் கே.டி.ராகவன், மதுரை சீனிவாசன், துணைத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வி.பி. துரைசாமி, குஷ்பு, கருப்பு முருகானந்தம் ஆகியோருக்கு அவரவர் விரும்பும் தொகுதிகளை அதிமுக கொடுக்க முன் வரவேண்டும்.
பாஜகவில் இது முதன்மைப் பத்து (PRIME TEN) என்று அழைக்கப்படுகிறது. அதற்கு அடுத்த பத்து தொகுதிகளை இரண்டாம் பத்து (SECONDARY TEN)என்ற அடிப்படையில் அதிமுகவும்,பாஜகவும் கலந்து பேசி முடிவு செய்யலாம் என்று பாஜக நிபந்தனை விதித்திருக்கிறது.
பாஜகவுக்கு எடப்பாடி அடிமையாக இருக்கிறார் என்று ஊடகங்களிலும் சமூக தளங்களிலும் பலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் பாஜகதான் அதிமுகவுக்கு அடிமையாக இருக்கிறது. தேர்தல் பேச்சுவார்த்தைகள் அதைத்தான் காட்டுகின்றன”என்று தெரிவிக்கிறார் கமலாலயத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்ட நிர்வாகி ஒருவர்.
**-ஆரா**
�,