பீஸ்ட்: குவைத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் தடையா?

Published On:

| By admin

ஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு, தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கடிதம் எழுதியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 13ஆம் தேதி ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து இருப்பதாகக் கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்துறைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து வருவதை வழக்கமாகக்கொண்டு, இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத் துறையினர் உருவாக்கி வருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதித் தலைவர்களின் பெயர்கள்கூட திரைப்படக் கதாபாத்திரங்களில் இடம்பெற்றால் அதற்குக் கடும் எதிர்ப்புகளை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதைப் பார்த்து வருகிறோம்.
ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராகச் செயல்படுவது போல தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. 2015 பெருவெள்ளத்தின்போது இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிளை யாரும் மறந்துவிட முடியாது. கொரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்த பந்தங்கள்கூடத் தொட மறுத்த உடல்களை அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்பினர். இப்படிப் பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்கமுடியாது.
உண்மை நிலை இப்படி இருக்கும்போது, இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள் என்பது போல பீஸ்ட் திரைப்படத்தின் கதை இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்தச் சூழலில், இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்துள்ள நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளிவந்தால், இஸ்லாமியர்களிடையே ஒரு சுணக்கமான சூழல் ஏற்படும். ஆகவே அசாதாரண சூழலைக் கருத்தில்கொண்டு, பீஸ்ட் திரைப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share