உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டோம்: வைகோ

Published On:

| By Balaji

சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என வைகோ தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி அமைத்த மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. முதலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். எனினும், இறுதியில் மனம் மாறி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றது மதிமுக. அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார். மாநிலங்களவை உறுப்பினராக வைகோ பொறுப்பேற்றார்.

வரும் சட்டமன்றத் தேர்தலையும் திமுக கூட்டணியில் இருந்தே மதிமுக எதிர்கொள்கிறது. சமீபத்தில் ஸ்டாலினை சந்தித்து பேசி வந்த வைகோ, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

தேர்தலில் 200 தொகுதிகளுக்கு அதிகமாக வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்கிற முனைப்புடன் திமுக செயலாற்றி வருகிறது. இதனால் கூட்டணியில் இருக்கும் நிரந்தர சின்னம் இல்லாத கட்சிகளின் வேட்பாளர்களில் பாதி பேரை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க திமுக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் சென்னையில் நேற்று (ஜனவரி 1) செய்தியாளர்களிடம் பேசிய வைகோவிடம், சின்னம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “எங்கள் கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்” என்று அறிவித்தார். எங்கள் முடிவு கூட்டணிக்கு பாதகமாக அமையாது என்று பதிலளித்தார். அதாவது திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என சொல்லிவிட்டார் வைகோ.

தொடர்ந்து, “களத்தில் திமுக முன்னணியில் உள்ளது. ரஜினி கட்சி துவங்கி இருந்தாலும், துவங்காமல் இருந்து இருந்தாலும் , திமுக கூட்டணி தான் வெற்றி பெற்று இருக்கும். 1996 பொதுத் தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸ் எனக்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. இந்த தேர்தல் களத்தில் யாருக்கும் ஆதரவு அளிக்கமாட்டார். நடிகர் ரஜினிகாந்த் வருத்தத்தில் இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை புண்படுத்தி மீம்ஸ் போடுவதை, கேலி செய்வதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்தார்.

ஆறுமுகசாமி ஆணையம் பல முறை சம்மன் அனுப்பிய போதிலும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆஜராகாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்ற வைகோ,  ஏனெனில், ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று தியானம் செய்து, அவரது மரணத்தில் மர்மம் உள்ளதென தெரிவித்தவர் பன்னீர்செல்வம். அவரே ஆஜராகவில்லை என்றால் உண்மையை மறைப்பதற்காகவா ஆணையம் அமைக்கப்பட்டது என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share