தமிழகத்தில் இருவேறு இடங்களில் அதிமுக சார்பில் வழங்கப்படவிருந்த பரிசுப் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், மக்களுக்கு பணம் வழங்கவோ, பொருட்கள் வழங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. பணம் கொண்டு செல்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விதிமுறைகளை மீறிய செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
திருப்பூர் மாவட்டம் அருகே குளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஒட்டன்சத்திரத்தில் பைபாஸ் சாலையில் அதிமுக நகர செயலாளர் காமராஜனின் உறவினரின் கல்லூரி ஒன்று உள்ளது. அங்கே மக்களுக்கு வழங்குவதற்காக பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்துதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் டிஎஸ்பி ஜெயராம் தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கல்லூரியில் சோதனை நடத்தினர். அப்போது, சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சில்வர் தட்டுகள், 4800 வேஷ்டிகள், சுமார் 3000 புடவைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு மேம்பாலம் அருகே பாஜகவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில், அதிமுக வார்டு செயலாளர் மனோகரன் என்பவருக்கு சொந்தமான மாருதி காரில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி படம் போடப்பட்ட கவரில் வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.
இதைக் கண்டுபிடித்த திமுகவினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரி ஆனந்தகுமார் காரை பார்வையிட்ட பின்பு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதுகுறித்து இந்த தொகுதி திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். இதற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறை ஆய்வாளர் ஜோதியை இடமாற்றம் செய்ய வேண்டும். பிடிபட்ட காரை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதுபோன்று பல இடங்களிலும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
**வினிதா**
�,