அதிமுக கூட்டணியில் பாமகவுடன் 23 தொகுதிகள் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு அவை என்னென்ன தொகுதிகள் என்றும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால் பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் தொகுதி எண்ணிக்கையிலேயே உடன்பாடு எட்டப்படவில்லை.
பாஜகவுடன் தொடர் பேச்சுவார்த்தை நடந்த நிலையில்,தேமுதிகவுடனான பேச்சில் தேக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன, இந்த சூழலில்தான், நேற்று (மார்ச் 2) மாலை 5.30 மணிக்கு லீலா பேலஸ் ஹோட்டலில் அதிமுக அமைச்சர்கள் இருந்த அறைக்கு தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் டாக்டர் இளங்கோ, கொள்கைப் பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மூவரும் சென்றார்கள்.
அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, மற்றும் எம்.பி. கே.பி.முனுசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் எடுத்த எடுப்பிலேயே, ஒட்டப்பட்ட ஒரு கவரை எடுத்த பார்த்த சாரதி, “எங்க அண்ணி கொடுத்து அனுப்பினாங்க. இந்தாங்க”என்று தங்கமணியிடம் கொடுத்துள்ளார். தபாலை வாங்கிய தங்கமணி கே.பி. முனுசாமியிடம் கொடுத்தார். அவர் வாங்கிப் பிரித்துப் பார்த்ததில் தொகுதி பட்டியல்கள் இருந்துள்ளது, தேமுதிக கொடுத்த பட்டியலை வேலுமணியும் தங்கமணியும் பார்த்தார்கள்.
அதன் பிறகு தேமுதிக பிரதிநிதிகளைப் பார்த்து கே.பி.முனுசாமி, “எங்கள் சிட்டிங் எம்.எல்.ஏ,க்கள் இருக்கிற தொகுதியும் கேட்குறீங்க. பாமக கேட்கிற தொகுதியும் கேட்குறீங்க. நம்பரும் அதிகமா இருக்கு, உங்களோட சுமுகமாக பேசி, நமது கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைக்கணும்னு சிஎம் அண்ணன் சொல்லியிருக்காரு. இதைக் கேட்டா நீங்களும் நல்லாயிருப்பிங்க. மேடத்திடம் சொல்லுங்கள் கொஞ்சம் ஒத்துழைக்கச் சொல்லுங்கள்”என்று கூறியுள்ளார் கே. பி. முனுசாமி. மேலும், “மத்த விஷயங்கள் மேடத்துக்குத் தெரியும். சுதீஷ்கிட்டயும் பேசியிருக்கிறோம். சுதீஷை டெல்லிக்கு அனுப்பிவைப்பார் சிஎம் அண்ணன்”என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் கேபிஎம்.
தேமுதிக குழுவினரும், “சரிங்கண்ணே…அண்ணிகிட்ட தகவல்களைச் சொல்கிறோம்” என்று புறப்பட்டுவிட்டார்கள் மகிழ்ச்சியாக.
இன்று கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் மேள தாளக் கொண்டாட்டத்துடன் விருப்ப மனுக்கள் கொடுத்து வருகிறார்கள் நிர்வாகிகள். இதுதான் அதிமுக- தேமுதிக கூட்டணியின் இப்போதைய நிலவரம்.
**-வணங்காமுடி**
�,