கூட்டம் திரட்டிய உதயநிதி: கலெக்டர்கள், எஸ்.பி.க்களுக்கு சிக்கல்!

Published On:

| By admin

தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி விட்டதாக திமுக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது.
அதிமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான
ஆர்.எம். பாபு முருகவேல், பிப்ரவரி 10ஆம் தேதி தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து உதயநிதி மீது புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரில், “3.2.2022 தேதியிட்ட மாநில தேர்தல் ஆணையத்தின் செய்தி அறிக்கை எண் 23ன்படி 11.2.2022 வரை எந்த கட்சியும் சாலையில் பொதுமக்களை கூட்டி கூட்டம் நடத்துவதற்கும், பேரணி நடத்துவதற்கும், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த சுற்றறிக்கை வெளிப்படைத் தன்மையோடு தேர்தல் ஆணையத்தின் சமூகவலைத்தள பக்கத்திலும் பதிவேற்றம் செய்ய பட்டு இருக்கிறது.

ஆனால் இதை ஆட்சி அதிகாரம் தன் கையில் இருக்கிறது என்ற காரணத்தினால் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 9.2.2022 அன்று திருச்சி மற்றும் கரூரிலும் 10.2.2022 அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலும் அப்பட்டமான தேர்தல் விதிமீறலாக நூற்றுக்கணக்கான மக்களை நெடுஞ்சாலையில் கூட்டி பெருந்தொற்று சட்டத்தை மீறுகின்ற வகையில் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அந்த இடத்தில் குழுமியிருந்தார்கள் அவர்கள் மத்தியில் தேர்தல் பரப்புரையை உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டார்.

இந்த தேர்தல் பரப்புரை யானது சட்டத்திற்கு உட்பட்டு அல்லது முறையான அனுமதியைப் பெற்று நடந்திருக்க வாய்ப்பில்லை மாறாக அனுமதி பெற்று இருப்பார்களேயானால் அவ்வாறு அனுமதி பெற்றவர்கள் மீதும், அந்த அனுமதியை வழங்கிய வழங்கிய திருச்சி, கரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் இந்த சட்ட விதி மீறலுக்கு பொறுப்பாவார்கள்.

இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் ஆகும். அப்பட்டமான பெருந்தொற்று சட்ட விதி மீறலாகவும் இது பார்க்கப்படுகிறது.

எனவே உதயநிதி ஸ்டாலின் மீது உடனடியாக தேர்தல் விதியின் படியும், இந்திய தண்டனை சட்டத்தின் படியும் உரிய வழக்கு தொடுக்க வேண்டும். அந்த நெடுஞ்சாலை கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய திருச்சி, கரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீதும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மீதும் அதே சட்டங்களின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்திருப்பதாக பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share