2021க்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். தேர்தல் கவுண்டவுன் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
அதிமுக-பாஜக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் இன்று காலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மாலையில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில், பாமகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.
அதன்படி, அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை அறிவித்தார்.
அதுபோன்று பாஜக 25சீட்டு கேட்டதாகவும், 15 சீட்டுதான் ஒதுக்கப்படும் என அதிமுக கூறிய நிலையில் 18சீட்டில் முடித்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாகவும்,
தேமுதிக 40 சீட்டு கேட்ட நிலையில், 18 சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமாகாவுக்கு 5 சீட் என 64 இடங்கள் போக அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.
**-பிரியா**�,