திருநெல்வேலியில் வாக்காளர் ஒருவர் எந்த வேட்பாளரும் ஓட்டுக்கு ரூ.500 பணம் தராததால் எனக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை என்று எழுதி வாக்குப்பெட்டியில் போட்டுவிட்டு சென்றுள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை முதல் நடந்து வருகிறது. இன்றும் பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு ஆரம்பமானது முதலே வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு சுவாரஸ்யமான கவுன்ட்டிங் கலாட்டாக்கள் நடந்து வருகின்றன. வாக்குப்பெட்டிக்குள் வாக்குச்சீட்டுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையையும், பூத் சிலிப்பையும் சில வாக்காளர்கள் போட்டுவிட்டு சென்றுள்ளனர். மற்றோர் இடத்தில் வாக்குச்சீட்டில் உள்ள அனைத்து சின்னங்களிலும் குத்தி தனது வாக்கை செல்லாததாக மாற்றியுள்ளார் ஒருவர். இப்படி பல்வேறு சம்பவங்கள்.
பொதுவாக தேர்தல் நேரங்களில் அந்தந்த கட்சி சார்பாக மக்களுக்கு ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் என்று தருவது வழக்கம். நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கும் ஒரு ஓட்டுக்கு 200 ரூபாய், 500 ரூபாய் எனத் தொடங்கி, அதிகபட்சமாக 1,000 ரூபாய் வரையும் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு பணம் விநியோகம் நடந்திருக்கும்போது, அதில் தனக்கு மட்டும் யாரும் பணம் தரவில்லை என்பதால், தன்னுடைய ஆதங்கத்தை ஒருவர் தனது வாக்குச்சீட்டில் எழுதி வைத்து சென்றுள்ளார்.
அதுபோன்று, நேற்று நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட 14 வார்டுகள், 30 கிராம பஞ்சாயத்துகளுக்கான வாக்கு எண்ணிக்கை டக்கரம்மாள்புரத்தில் உள்ள ரோஸ்மேரி கல்லூரியில் நடைபெற்றது. அப்போது, அலுவலர் ஒரு வாக்குச்சீட்டை எடுத்து பிரிக்கும்போது, அதில் எந்த சின்னத்துக்கும் வாக்கு அளிக்கவில்லை, மாறாக, ‘எந்த வேட்பாளரும் ஓட்டுக்கு எனக்கு ரூ.500 பணம் தராததால், யாருக்கும் வாக்களிக்க எனக்கு விருப்பம் இல்லை’ என்று எழுதியுள்ளார். இதைப் படித்த அலுவலருக்கு ஒரு நிமிடம் தலைசுற்றியது.
அதே மையத்தில் மற்றொரு வாக்குச்சீட்டில், சின்னத்தின் மீது முத்திரை குத்துவதற்கு பதிலாக வாக்காளர் ஒருவர் கையெழுத்தைப் போட்டு சென்றுள்ளார். மற்றொரு வாக்குச்சீட்டில் முத்திரைக்கு பதிலாக அந்த இடத்தில் தனது கைநாட்டை ஒருவர் வைத்து சென்றுள்ளார். இவை மூன்றும் செல்லாத ஓட்டுகள் என அறிவிக்கப்பட்டன.
பணத்துக்கு ஓட்டை விற்க கூடாது என்றும், அரசியல் கட்சிகள் மக்களுக்குப் பணத்தை விநியோகிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், ஓட்டுக்குப் பணம் என்ற கன்செப்ட் தொடர்ந்து நடைபெற்றுதான் கொண்டிருக்கிறது.
**-வினிதா**
�,