திமுகவினர்-அதிமுகவினர் மோதல்: எஸ்.பி வேலுமணி கோரிக்கை!

politics

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது பல்வேறு காரணங்களுக்காக 62 இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று(மார்ச் 26) நடைபெற்று வருகிறது. இன்றைக்கும் பல்வேறு இடங்களில் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சில இடங்களில் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. அதனுடன், வாக்குச்சீட்டை கிழித்தும், வாக்குப் பெட்டியை வீசி எறிந்தும் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று(மார்ச் 26) கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தேர்தல் மையத்துக்கு வெளியே கூடி இருந்த அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. இதில், திமுக கவுன்சிலரின் கணவர் செந்தில்குமாரின் மண்டை உடைந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அங்கிருந்த போலீஸ் வாகனத்தையும் சூறையாடியுள்ளார்கள். இந்த மோதலைத் தடுப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மோதல் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் மக்களின் அமோக ஆதரவோடு அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றால், அதில் அதிமுகவே வெற்றி பெறும். அதிமுகவின் இந்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, தேர்தலை நிறுத்த சட்ட விரோதமாக தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

தேர்தல் நடைபெறும் வளாகத்தில் திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து, ஜனநாயகத்தை காப்பாற்ற முயன்ற அதிமுகவினர் கைது செய்யப்பட்டிருக்கிறர்கள். அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அராஜக போக்கை பயன்படுத்தி தேர்தலை மீண்டும் நிறுத்த திமுக முயற்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
காவல்துறையும், மாநில தேர்தல் ஆணையமும் நியாயமாக செயல்பட்டு தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று கரூர், புலியூர் பேரூராட்சியில் போதுமான உறுப்பினர்கள் வராததாலும், தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலை, திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்ததாலும் இரண்டாவது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *