�பொங்கல் பரிசில் தலைவர்கள் படங்கள் இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் 19ஆம் தேதி சேலத்தில் தொடங்கிய முதல் நாள் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது.
பரிசுத் தொகைக்காக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது அரசு தரப்பு வழக்கறிஞர், இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன் விநியோகிக்கப்பட்டதாகவும், கட்சியினர் ஆர்வ மிகுதியால் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டது.
இந்த நிலையில் வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு முன்பு நேற்று (ஜனவரி 4) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட சுற்றறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அரசு வழங்கும் டோக்கன்களில் எந்த ஒரு கட்சி தலைவர்களின் படங்களும் இடம்பெறக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.
**எழில்**�,