திமுக எழிலனை எதிர்த்துப் போட்டியிடுவது சவால்தான்: குஷ்பு

Published On:

| By Balaji

2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு, திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை எதிர்த்துப் போட்டியிடுவது சாவல்தான். ஆனால் சாவல்கள் இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று கூறியுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 17 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குஷ்பு, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் முகாமிட்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பணிகளை செய்து வந்தார். இந்த சூழலில், அந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் குஷ்பு அதிருப்தியிலிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

தற்போது, அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாய்ப்பு கொடுத்த டெல்லி தலைமை, தமிழக தலைமைக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

புதிய தலைமுறை ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. இன்னும் ஆயிரம் விளக்கு பகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலனை எதிர்த்துப் போட்டியிடுவது கண்டிப்பாகச் சவாலானதாக இருக்கும். ஆனால், சாவலைச் சந்தித்தால் தானே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்” என்று கூறியுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share