கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டாம்!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் வருகிற 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். கிராம சபை கூட்டத்தில், அந்தந்த ஊராட்சிகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன், ஊரக பகுதிகளின் மக்களின் குறைகளையும் தீர்த்து வைக்கிறது.

இந்த நிலையில், வரும் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கிராம சபைக் கூட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு கிராம பஞ்சாயத்துகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை அனுப்பி உறுதி செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ குடியரசு தினத்தன்று சமூக இடைவெளியை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்த முடியும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதை நடத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக கடந்தாண்டும் குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடந்தாண்டு அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

**குடியரசு தின தேநீர் விருந்து**

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் குடியரசு தின தேநீர் விருந்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கொரோனா பெருந்தொற்று காரணமாக குடியரசு தினத்தன்று அளிக்கப்படும் தேநீர் விருந்து நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா தொற்றுப்பாதிப்பு குறைந்து நிலைமை மேம்பட்ட உடன் நிச்சயமாக வேறு ஒருநாளில் விருந்து நிகழ்ச்சி நடத்தப்படும். தமிழ்நாடு அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share