பாஜகவை பார்த்து பயப்படுபவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை;அவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சமூக வலை தளங்களில் செயலாற்றும் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நேற்று(ஜூலை 16) நடைபெற்றது. 3500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,” காங்கிரஸ் கட்சியில் பயமில்லாதவர்களுக்கு மட்டுமே இடமுண்டு. பாஜகவை பார்த்து பயப்படுபவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் வெளியே செல்ல கதவு திறந்துள்ளது. ஆர்எஸ்எஸ் கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களும் வெளியேறலாம். காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் தேவையில்லை. பாஜகவை பார்த்து பயப்படுபவர்களே அக்கட்சியில் இணைகின்றனர். ஒரு சிலர் தங்களது சுய நலத்திற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு அங்கு எந்த மதிப்பும் கிடைக்காது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அச்சமற்ற மக்கள்தான் கட்சிக்கு தேவை. அதுதான் நமது சித்தாந்தம். காந்திய கொள்கை மீது நம்பிக்கையுடையவர்கள் மட்டுமே நமக்கு தேவை. அவர்களுக்காகவே நமது கட்சி செயல்படுகிறது. அதான் எனது அடிப்படை செய்தி. பயமில்லாத பலர் காங்கிரஸூக்கு வெளியே உள்ளனர். அவர்களை காங்கிரஸூக்குள் கொண்டுவர வேண்டும்” என்று பேசினார்.
ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா,நாராயண் ராணே, ராதாகிருஷ்ண விக்கி படேல், குஷ்பு ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,