கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மக்களின் உயிர்களைக் காத்திட மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மருத்துவர்கள் மீதான தாக்குதல் என்பது நாட்டில் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, நேற்று (ஜூலை 20 ) நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
அதில், “அரசமைப்பு சட்டத்தின்படி ‘சுகாதாரம்’ மற்றும் ‘சட்டம் ஒழுங்கு’ மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வருவதால், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கைக் குறித்த தகவல்கள் ஒன்றிய அரசால் பராமரிக்கப்படுவது இல்லை.
2021 ஜூன் 18 அன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்திய இந்திய மருத்துவ சங்கம், வன்முறைகளைத் தடுப்பதற்காகக் கடுமையான சட்டங்களை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்நிலையில், வன்முறை அச்சமின்றி மருத்துவர்கள் பணியாற்றுவதை உறுதி செய்யுமாறும், வன்முறையாளர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒன்றிய சுகாதார அமைச்சர் கடிதம் எழுதினார்.
2020 செப்டம்பர் 28 அன்று பெருந்தொற்று (திருத்த) சட்டம்-2000-ஐ இந்திய அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின் கீழ், சுகாதாரப் பணியாளர்கள் மீது வன்முறையில் ஈடுபடுவது பிணையில் வர முடியாத குற்றமாகும். வன்முறையில் ஈடுபட்டவர்களுக்குச் சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சுகாதார வசதிகளைக் கிராமப்புறங்களில் மேம்படுத்துவதற்காகத் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காகப் பிரதமரின் ஏழைகள் நலத் தொகுப்பின் கீழ் ஆயுள் காப்பீட்டுப் பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தனிநபர் விபத்து காப்பீடாக ரூ 50 லட்சம் வழங்கப்படுகிறது. 2021 ஜூலை 15 வரை, மொத்தம் 921 மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தலா ரூ.50 லட்சம் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**
�,